ஏர் அரேபியாவை உரசிய பறவை... எமிரேட்ஸ் ஏ 380ல் எழுந்த புகை... தரையிறங்கிய விமானங்கள்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் இருந்து ஷார்ஜாவிற்கு கிளம்பிய ஏர் அரேபியா விமானத்தின் மீது பறவை உரசியதால் விமானம் மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
165 பயணிகளுடன் நேற்று காலை 6 மணிக்கு ஏர் அரேபியா விமானம் ஜெய்ப்பூரில் இருந்து ஷார்ஜாவிற்கு கிளம்பியது. அப்போது திடீரென்று பறவை உரசியதை அடுத்து விமானம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர், விமானத்தில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பிற்பகலில் விமானம் சார்ஜாவிற்கு கிளம்பி சென்றது.
இதேபோல் எமிரேட்ஸ் ஏ 380 ரக பயணிகள் விமானத்தின் காக்பிட் அறையில் இருந்து புகை கிளம்பியதால் விமானம் அவசரமாக இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
510 பேருடன் எமிரேட்ஸ் ஏ 380 ரக விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து துபாய் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கொழும்புவில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது புகை கிளம்பியது. இதனையடுத்து விமானி அவசர அழைப்பு மூலம் தகவல் தெரிவித்தார்.
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தொடர்பு கொண்டு ‘மே டே, மே டே' என்று கூறவே உடனடியாக அவசர ஏற்பாடுகளை செய்யப்பட்டன. அதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவசர அழைப்பு வந்து 39 நிமிடத்தில் எமிரேட்ஸ் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 471 பயணிகளும், 30 விமான சிப்பந்திகளும் உடனிருந்தனர். விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வேறு ஒரு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த 2012ம் ஆண்டு இதேபோல ஒரு அவசர நிலையின் போது எமிரேட்ஸ் ஏ 380 ரக விமானம் கொழும்புவில் தரையிறங்க கேட்ட போது மிகப்பெரிய விமானத்தை தரையிறக்கும் அளவிற்கு இடமில்லை என்று கொழும்பு விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.