லண்டன் விமானத்தில் நைசாக ஏறிய மும்பை எலி... மீண்டும் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!
மும்பை: மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், எலி இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானம் மும்பை விமான நிலையத்திற்கே திரும்பியது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான டிரிம்லைனர் விமானம் 240 பயணிகளுடன் நேற்று மும்பையிலிருந்து லண்டன் புறப்பட்டது. விமானம் டெகரான் வான்பகுதியில் பறந்தபோது, விமானத்தின் உணவு விடுதியில் எலி ஒன்று சுற்றித் திரிவதை ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார்.
உடனடியாக இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து துறை வகுத்துள்ள விதிமுறையின்படி, மும்பை விமான நிலையத்திற்கு விமானி தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானம் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பப் பட்டது.
அங்கு தொலைவான நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட விமானம், பூச்சிகள், சிறு விலங்குகளை நீக்கும் வகையிலான வாயு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் திருப்பி அழைக்கப்பட்டது. விமானப் பயணிகள் வேறு விமானத்தில் லண்டன் அனுப்பிவைக்கப்பட்டனர்' என்றார்.
ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் இதேபோல் டெல்லி விமான நிலையத்திலிருந்து மிலன் நகருக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் எலி காணப்பட்டதைத் தொடர்ந்து, 2 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது நினைவு கூரத்தக்கது.