மோதுவது போல் சென்ற இந்தியா-நேபாள விமானங்கள்.. நடுவானில் திக் திக்..விபத்து தவிர்ப்பு..என்ன நடந்தது?
காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டு நோக்கி சென்ற ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மோதுவது போல் அருகருகே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த திக் திக் சம்பவம் குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் நாடு நேபாளம். மலைப்பகுதிகள் நிறைந்த நாடாக உள்ள நேபாளத்தில் விமான பயணம் என்றாலே கொஞ்சம் ரிஸ்க்தான் என்று சொல்ல வேண்டும்.
ஆம், உலக அளவில் அதிக விமான விபத்துக்கள் நடைபெறும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது.

யெட்டி ஏர்லைன்ஸ்
அதற்கு அங்குள்ள இயற்கை கால சூழல் ஒருபக்கம் மற்றும் விமான நிலையங்களுக்கான இட வசதி , விமான பராமரிப்பு என பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் நேபாளத்தின் யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் போது விழுந்துவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர். ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட விமான விபத்து ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்களில் ஒன்றாக அமைந்தது.

காத்மாண்டு நோக்கி சென்ற விமானங்கள்
இந்த நிலையில், நேபாளத்தில் இரு விமானங்கள் மோதிக்கொள்வது போல ஒரே இடத்திற்கு சென்றதும் பெரும் பரபரபை ஏற்படுத்தியிருக்கிறது. நடுவானில் பல ஆயிரம் அடி உயரத்தில் நடைபெற்ற இந்த திக் திக் சம்பவம் குறித்த விவரம் வருமாறு: கடந்த வெள்ளிக்கிழமை நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ -320 என்ற விமானம் மலேசிய தலைநகர் கோலலம்பூரில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு வந்து கொண்டிருந்தது.

நடு வானில் மோதுவது போல்..
அதேபோல், இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து காத்மாண்டு நோக்கி டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானமும் சென்று கொண்டிருந்தது. ஏர் இந்தியா விமானம் 19 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கீழே இறங்கி வந்துள்ளது. அப்போது அதே பகுதியில் 15 ஆயிரம் அடி உயரத்தில் நேபாள ஏர்லைன்ஸ் விமானம் சென்றுள்ளது. ரேடாரில் இரு விமானம் நெருங்கி வருவது தெரிந்ததும் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் அவசரமாக 7 ஆயிரம் அடி தாழ்வாக சென்றுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு
இரு விமானங்களும் நெருங்கி வருவது உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு விமானங்கள் விலகி செல்ல நடவடிக்கை எடுக்கப்படதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு நேபாள விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி மூன்று அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழு நடுவானில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது.

ஊழியர்கள் இடை நீக்கம்
விசாரணைக்கு பிறகு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் விமானக் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து மூன்று ஊழியர்களும் மறு அறிவிப்பு வரை இடை நீக்கம் செய்யப்படுவதாக நேபாள விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. நடுவானில் விமானங்கள் மோதிக்கொள்வது போல் வந்த நிகழ்வு குறித்து ஏர் இந்தியா நிறுவனம் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications