சர்வதேச சேவையில் 'பர்ஸ்ட் கிளாஸ்' சீட்களை அகற்றும் ஏர் இந்தியா
மும்பை: இழப்பை குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச சேவை விமானங்களில் உள்ள முதல் வகுப்பு இருக்கைகளை அகற்றவிருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் பல கோடி நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நஷ்டத்தை குறைக்கும் முயற்சியில் ஏர் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக சர்வேதச சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானங்களில் இருக்கும் முதல் வகுப்பு இருக்கைகளை அகற்ற தீர்மானித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் போயிங் 777-300 இஆர் ரக விமானத்தில் முதல் வகுப்பு இருக்கைகளை வைத்துள்ளது. இந்த விமானங்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் நியூவார்க், சிகாகோ, சிங்கப்பூர், ஜெத்தா உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றன.
ஏர் இந்தியாவிடம் முதல் இருக்கைகள் உள்ள 12 விமானங்கள் உள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் தலா 4 முதல் வகுப்பு இருக்கைகள் உள்ளன. இந்த இருக்கைகளில் பெரும்பாலும் அரசு அதிகாரிகளே பயணம் செய்கிறார்கள்.
பெரும்பாலும் இந்த 4 இருக்கைகளில் ஒன்று மட்டுமே புக் செய்யப்படுகிறது. மீதமுள்ள இருக்கைகள் ஆள் இன்றி உள்ளது. இந்நிலையில் தான் அந்த இருக்கைகள் அகற்றப்படவிருக்கின்றன.
கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.3,900 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.