ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு.. ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றியும் விசாரணை: சுப்ரீம் கோர்ட் உறுதி
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மலேசிய நிறுவனமான மேக்சிஸ் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன் கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேக்சிஸ் நிறுவனத் தின் அனந்தகிருஷ்ணனும், ரால்ப் மார்ஷலும் நேரில் ஆஜராகத் தவறினால், ஏர்செல் நிறுவனத்தின், '2ஜி' உரிமம் முடக்கப்படும் என, சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷியாவை சேர்ந்த, மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்தார் என, குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், 742 கோடி வரை பணம் கைமாறியதாக கூறப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது நேற்று, ஆஜராகி வாதிட்ட பாஜக எம்பியும், வழக்கறிஞருமான, சுப்பிரமணியன் சுவாமி, இதில் முன்னாள் நிதி அமைச்சரான சிதம்பரத்தின் பங்கு பற்றி விசாரிக்க கோரிக்கைவிடுத்தார்.
சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்தபோதுதான், ஏர்செல்-மேக்சிஸ் டீலுக்கு நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.
வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தது. தற்போதைய நிலையில், எங்களது உத்தரவு எந்த அளவுக்கு அமலாகிறது என்பதைத்தான் பார்த்து வருகிறோம், விரைவில் சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு பற்றி விசாரிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.