ஒபாமாவுக்கு அஜ்மீர் தர்கா நிர்வாகம் அழைப்பு
ஜெய்பூர்: இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அஜ்மீர் தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார்.
இந்நிலையில் அஜ்மீரில் இருக்கும் க்வாஜா மொய்னுத்தீன் சிஸ்தி தர்காவுக்கு வருமாறு தர்கா நிர்வாகம் ஒபாமாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து தர்கா நிர்வாக கமிட்டியின் தலைவர் அஸ்ரார் அகமது கூறுகையில்,
பல்வேறு மதத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்தவர் ஒபாமா. சுஃபி இஸ்லாமியர்களின் பெரிய மையமான அஜ்மீர் தர்காவுக்கு ஒபாமா வந்தால் அது இஸ்லாம் மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு இடையே புரிதல் ஏற்பட உதவும். இஸ்லாத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு உள்ளது என்கிற எண்ணம் ஏற்பட அமெரிக்கா தான் காரணம். இந்நிலையில் ஒபாமா தர்கா வந்தால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வசதியாக இருக்கும் என்றார்.
முன்னதாக ஒபாமா கடந்த 2010ம் ஆண்டு முதன்முதலாக இந்தியா வந்தபோது வீடியோ கான்பரன்ஸிங் மூலம் அஜ்மீரில் உள்ள கான்புரா கிராமத்தினருடன் பேசினார். இம்முறை அவர் அஜ்மீர் செல்வாரா, இல்லையா என்பது பற்றி பலர் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள்.