மது அருந்தும் கணவர் தனது மனைவியின் வீட்டுக்கு செல்லக் கூடாது... டெல்லி கோர்ட் உத்தரவு
டெல்லி: வேலைக்கு செல்லாமல் மது அருந்தும் பழக்கத்தால் மனைவியின் வருமானத்தை வீணடித்து, அவரை துன்புறுத்திய கணவர், தனது மனைவி மற்றும் குழந்தை வாழும் வீட்டுக்கு செல்லக் கூடாது என டெல்லி பெருநகர நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள மயூர் விஹாரைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் ‘எனக்கு 1983ஆம் ஆண்டு திருமணமானது. எனது கணவர் வேலைக்குச் செல்வதில்லை. மது அருந்தும் பழக்கம் உடையவர். நான் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தையும் வீணடித்து, என்னையும் துன்புறுத்தி வருகிறார். எனவே, எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை டெல்லி பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரிச்சா பரிஹார் விசாரித்தார். விசாரணையின் முடிவில் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருந்ததாவது :-
தன் மீதான புகாரை பொய்யென நிரூபிப்பதற்கு, சம்பந்தப்பட்ட நபர் (புகாரளித்த பெண்ணின் கணவர்) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், எந்தவித பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.எனவே, தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டதாக கருதப்படுகிறது.
எனவே, குடும்ப வன்முறைச் சட்டம் 2005-ன் கீழ், தகுந்த நிவாரணம் பெற புகாரளித்த பெண் தகுதியுடையவராகிறார். குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், புகார் அளித்த பெண் மற்றும் அவரின் குழந்தையின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். அத்துடன், வழக்குச் செலவு உள்பட ரூ.25,000 இழப்பீடாகவும் வழங்க வேண்டும்.
இது தவிர, புகாரளித்த பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம், அவர் மற்றும் அவரது குழந்தை தங்கியிருக்கும் வீட்டுக்கு கணவர் செல்லக் கூடாது. எனினும், புகார்தாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.