திடீர் திருப்பத்தால் பரபரப்பு.. ஆளுநர் மீது அனைவர் கவனமும்.. கர்நாடகாவிலும் ஒரு கூவத்தூர் கூத்து?
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு அமைய வாய்ப்பு அமைந்துள்ளது.
இதையடுத்து ஆளுநர் வஜுபாய் வாலா எடுக்க உள்ள முடிவு மீது மிகுந்த, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ரிசார்ட் அரசியல் கர்நாடகாவில் அரங்கேறுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அழைப்புவிடுக்கும் பொறுப்பு ஆளுநர் கையில் உள்ளது. அதிக இடங்களை வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க வாய்ப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் சாய்ஸ்
காங்- மஜத ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் பாஜகவுக்கே ஆளுநர் முதலில் வாய்ப்பு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அரசியல் சாசனப்படி அதுதான் ஆளுநரின் கடமையும் கூட. எனவே, பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கத்தில், காங்கிரஸ் கட்சி மற்றும் மஜதவில் இருந்து எம்எல்ஏக்களை ஈர்க்க கூடும். சுயேச்சைகளையும் ஈர்க்க கூடும்.
ரிசார்ட் அரசியல்
தங்கள் பக்கம் வர விரும்பும் எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க பாஜக முயலக்கூடும். இதன்பிறகு கட்சித்தாவல் விவகாரம், நம்பிக்கை வாக்கெடுப்பு என எவ்வளவோ குழப்பங்களுக்கு அது வாய்ப்பை அளிக்கும்.
ஆளுநர் கூப்பிடுவாரா?
அதேநேரம், காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தால் பிரச்சினை இன்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடியும் என எதிர்பார்க்கலாம். எனவே ஆளுநர் வஜுபாய் வாலா மீது அனைவர் கவனமும் குவிந்துள்ளது. அவ்வாறு முதலிலேயே ஆளுநர் காங்கிரஸ்-மஜதவை ஆட்சியமைக்க அழைக்க மாட்டார் என்பதே யதார்த்தம்.
குஜராத்காரர்
குஜராத்தை சேர்ந்த 80 வயது வஜுபாய் வாலா, தனது இளமை காலத்தில் ஆர்எஸ்எஸ்சில் இணைந்து செயல்பட்டவர். பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தில் இணைந்து பணியாற்றி தொடர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான வஜுபாய் வாலா, குஜராத்தின் நிதி அமைச்சராகவும், சபாநாயகராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.