மத்திய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து நாளை பந்த்.. தமிழகத்திலும் பஸ், ஆட்டோ, லாரி சங்கங்கள் ஆதரவு!
டெல்லி: மத்திய அரசின் புதிய போக்குவரத்து சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் நாளை, 30ம் தேதி பஸ், லாரி, ஆட்டோ, டாக்சிகள் வேலை நிறுத்தம் மேற்கொள்கின்றன.
இந்தியாவில் விபத்துகள் மூலம் ஆண்டுக்கு 1.38 லட்சம் பேர் பலியாகின்றனர். விபத்து உயிர்ப்பலிகளைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு சாலை பாதுகாப்பு, போக்குவரத்து சட்ட திருத்தத்தை விரைவில் மக்களவையில் அறிமுகம் செய்ய உள்ளது.
லைசென்ஸ் ரத்து
புதிய சட்டத் திருத்தத்தின்படி தற்போது உள்ள டிரைவிங் லைசென்ஸ், வாகன பொ்மிட் அனைத்தும் ரத்து செய்யப்படும். லைசென்ஸ் வழங்குவதற்காக தனியார் நிறுவனங்கள் நியமிக்கப்படும். அந்த நிறுவனங்களில் இனி டிரைவிங் லைசென்ஸ், பெர்மிட் பெற வேண்டும்.
ஆர்டிஓ ஆபீஸ்கள் மூடல்
அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் மூடப்படும். தமிழகத்தை பொறுத்தவரை அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறை வட்டார போக்குவரத்து அலுவலகம்தான். இந்த வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்கும்.
போக்குவரத்து விதிமீறல்
சிக்னல்களில் எல்லைக்கோட்டை தொடுவது, சீட் பெல்ட் அணியாதிருப்பது, ஹெல்மெட் அணியாதிருப்பது என ஒவ்வொரு விதிமீறலுக்கும் அபராதப் புள்ளிகள் தலா 3 கணக்கிடப்படும். 12 புள்ளிகள் வந்தால், லைசென்ஸ் ஒரு ஆண்டு ரத்து செய்யப்பட்டு சிறை தண்டனை வழங்கப்படும்.மீண்டும் அதே தவறை செய்தால் தண்டனை, அபராதம் 2 மடங்காக உயரும். இதன்படி ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.2500, சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு
15 வருடங்கள் ஆன வாகனங்களை இயக்கக்கூடாது. இடையில் வாகனங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அந்த பழுதை நீக்காமல் புதிய ஸ்பேர் வாங்கி பொருத்த வேண்டும். விபத்தில் குழந்தைகள் இறந்தால் விபத்துக்கு காரணமானவருக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம், 7 வருட சிறை தண்டனை கிடைக்கும்.
போதை ஆசாமிகளுக்கு
போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம், 3 மாதம் சிறை, 6 மாதம் லைசென்ஸ் ரத்து, பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் ஓட்டினால் ரூ.1 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை அல்லது 2ம் சேர்த்து வழங்கப்படும்.
தொழிலாளர்களுக்கு கோபம்
கடும் விதிமுறைகள் கொண்ட சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்து போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 வரை பஸ், கார், லாரி, ஆட்டோ, டாக்சி என எந்த வாகனமும் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
முதலாளிகள் வசம் போயிட்டால்..
ஸ்டிரைக் குறித்து சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வர உள்ள போக்குவரத்து சாலை பாதுகாப்பு சட்டம் மூலம் தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அரசு போக்குவரத்து கழகங்கள் அனைத்தும் தனியார் வசம் மாறிவிடும். அனைத்து சாலைகளின் பெர்மிட்களும் பெரிய முதலாளிகள் வசம் கொடுக்கப்படும்.இந்த சாலை பெர்மிட்களை ஏலம் எடுக்கும் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தை தான் ஏழை எளியவர்கள் செலுத்த வேண்டும்.
பிழைக்கட்டுமே..
தமிழகத்தை பொறுத்தவரை 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்தவர்கள் தாங்களாகவே டிரைவர்களாகி வாழ்க்கை நடத்துகின்றனர். இனி அந்த டிரைவிங் லைசென்ஸ் ரத்தாகும். பயோமெட்ரிக் முறைப்படியான லைசென்ஸ் பெற வேண்டியது வரும். மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு, ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படும் இந்த சட்டத்தை கண்டித்து வரும் 30ம் தேதி தமிழகத்தில் அனைத்து வாகனங்களும் ஓடாது" என்றார்.
11 தொழிற்சங்கங்கள்
இது தொடர்பாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவில் மாநில அரசுகளின் போக்குவரத்துத் துறை உரிமை களை பறிக்கும் அம்சங்கள் இருக்கின்றன. மாநில அரசுகளுக்கு வர வேண்டிய வாகன வரி, மத்திய அரசுக்கு சென்றுவிடும் அபாயமும் உள்ளது. எனவே, இந்தப் புதிய சட்ட மசோதாவை எதிர்த்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
பிற மாநில ஆதரவு
பல்வேறு மாநிலங் களில் செயல்பட்டு வரும் 43க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள் கின்றன. நாடு முழுவதும் அனைத்து தரப்பட்ட வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களும் பங்கேற்பர்.
ஆட்டோக்கள் ஓடாது
தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறும்போது, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நடக்கும் வேலைநிறுத்தத்தில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கும். தமிழகம் முழுவதும் உள்ள 2.40 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையில் 73 ஆயிரம் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயங்காது என்றார்.