தேச நலன் கருதி அனைத்துக்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மோடி வலியுறுத்தல்
தேச நலன் கருதி அனைத்துக்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேச நலன் கருதி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது உள்பட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்பி புயலைக் கிளப்ப எதிர்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கடசிகளும் தீர்மானித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த விவகாரம் குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தடுத்து நாடாளுமன்ற அவைகளை சுமூகமாக நடத்த மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதில் ரூபாய் நோட்டுகள் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதால் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது:
இக்கூட்டத் தொடரில் சரக்கு சேவை வரி திருத்த மசோதா குறித்த அனைத்து நடைமுறைகளையும் முடிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் குளிர்கால கூட்டத்தொடரினை பயனுள்ளதாக ஆக்க ஒத்துழைக்குமாறும், பொது நலன் கருதி அனைத்து பிரச்னைகள் குறித்தும் உரிய விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சரக்கு சேவை வரி மசோதவுக்கு ஒத்துழைப்பு நல்கியது போன்று இந்தக் கூட்டத்தொடரிலும் தேசிய நலன் கருதி அனைத்து பிரச்னைகளிலும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் நிதி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் தேர்தல் சமயங்களில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து உரிய விவாதம் நடத்த வேண்டும்.
பொது வாழ்வில் ஈடுபடுகின்றவர்கள் மீதான எதிர்மறையான எண்ணங்களை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் முன்மாதியாக திகழ வேண்டும்.
இவ்வாறு அனந்தகுமார் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையீல், பண நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் உரிய முன்னேற்பாடுகளை செய்யாமல் அரசு அவசர கதியில் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, இக்கூட்டத் தொடர் 22 அமர்வுகளை மட்டுமே கொண்டுள்ளது. அதில் குறைந்த பட்சம் 25 மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த எதிர்க்கட்சிகளின் கவலைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.