கண்ணா, 100 கிராம் இலவச லட்டு தின்ன ஆசையா?...திருப்பதியில் இனி கிடைக்கும்!
நகரி: திருப்பதி லட்டின் எடையை 100 கிராமாக குறைத்து, அதனை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
திருப்பதி என்றாலே மொட்டையைப் போலவே டக்கென அடுத்து ஞாபகத்திற்கு வருவது லட்டு. தற்போது திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு 2 லட்டும், ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், நாளுக்கு நாள் திருப்பதி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைவருக்கும் லட்டு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இடைத்தரகர்கள் மூலம் லட்டுக்களை கள்ள மார்க்கெட்டில் வாங்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புதிய திட்டம்...
இதனை தவிர்க்கவும், பக்தர்களுக்கு தாராளமாக லட்டு கிடைக்கவும் தேவஸ்தானம் புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன்படி, லட்டின் எடையைக் குறைத்து, குறைந்த விலையில் அதனை பக்தர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமலை அன்னமயா மண்டபத்தில் நேற்று நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

100 கிராம் எடையில்...
தற்போது வழங்கப்படும் லட்டு 175 கிராம் எடை கொண்டதாக உள்ளது. இதனை 100 கிராமாக குறைத்து ரூ.15 அல்லது ரூ.20 விலையில் பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

செலவு குறைவு...
தற்போது ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிராம் லட்டுக்கு 14 காசு செலவாகிறது. அந்த வகையில் 100 கிராம் லட்டுக்கு 14 ரூபாய்தான் செலவாகும் என கணக்கிடப்பட்டது.

நஷ்டம் இல்லை...
அந்த வகையில் ஒரு லட்டு 15 ரூபாய் அல்லது 20 ரூபாய்க்கு விற்கப் படும். இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு பெரிய இழப்பு ஏற்படாது என்றும், அதே சமயம் பக்தர்களுக்கும் தாராளமாக லட்டு கிடைக்கும் என்றும் தேவஸ்தானம் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

இலவச லட்டு...
இது ஒருபுறம் இருக்க, எடையை குறைத்து பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கலாம் என அறங்காவலர்கள் சிலர் யோசனை தெரிவித்தனர்.

முக்கிய முடிவுகள்...
லட்டு பிரச்சினை மட்டுமின்றி, நாராயணகிரி உத்யாவனத்தில் 1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் ஆயிரங்கால் மண்டபம் கட்டுவது, ஏழுமலையான் தாயார் வகுளமாதாவுக்கு கோவில் கட்டுவது, ஆண்டு பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரமோற்சவத்தின்போது வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்வது போன்ற முடிவுகளும் அறங்காவலர் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications