இந்தியாவை தாய்நாடாக பார்க்கும் அனைவரும் இந்துக்கள் தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
ராய்ப்பூர்: மதம், மொழிக்கு அப்பாற்பட்டு இந்தியாவை தாய்நாடாக பார்க்கும் அனைவரும் இந்துக்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
மேலும், யாரும் எந்தக் காரணத்துக்காகவும் தங்களுடைய மதம் சார்ந்த சடங்குகளை மாற்ற தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
நாட்டில் அண்மைக்காலமாக இந்து - முஸ்லிம் மதத்தினர் இடையே மோதல் போக்கு காணப்படும் நிலையில், மோகன் பகவத்தின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

"அனைவரும் இந்துக்கள்.."
சத்தீஸ்கரில் சுர்குஜா நகரில் உள்ள அம்பிகாப்பூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் சார்பிலான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மோகன் பகவத் பேசியதாவது: இந்தியாவில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான் என்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. 1925-ம் ஆண்டில் இருந்தே நாங்கள் (ஆர்எஸ்எஸ்) இந்த விஷயத்தை கூறி வருகிறோம். இந்தியாவில் பலவிதமான மொழிகள், ஜாதிகள், மதங்கள் இருக்கின்றன. இந்த வேற்றுமைதான் இந்தியாவின் பலம் என்பதை நாம் புரிந்துகொளள வேண்டும். அதேபோல, இந்த வேற்றுமைகளை ஏற்று அவற்றை அங்கீகரிக்கும் ஒரே சித்தாந்தம் 'இந்துத்துவா' என்பதையும் யாரும் மறக்க வேண்டாம்.

மதமாற்றம் தேவையில்லை..
மதம், கலாச்சாரம், மொழி, உணவுப்பழக்கம், சித்தாந்தம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, இந்தியாவை தனது தாய்நாடாக யார் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இதனால் அவரவருக்கு உரிய மதச் சடங்குகளையோ, பழக்கத்தையோ யாரும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, யாரையும் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாற்ற வேண்டியதும் கிடையாது.

அகண்ட பாரதம்..
இந்தியாவில் வாழும் அனைவரின் மரபணுவும் (டிஎன்ஏ) ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் இருந்து திபெத்தின் கிழக்கு (சீனா) வழியாக இலங்கையின் மேற்கு வரை பரவியுள்ள நிலப்பரப்பில் வாழும் அனைவரின் மரபணுவும் கடந்த 40 ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றாகவே உள்ளது. இதனால்தான் நாம் அகண்ட பாரதம் என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறோம்.

"மாற்று மதங்களை மதியுங்கள்.."
எனவே, இந்தியாவில் உள்ள நாம் ஒருவரையொருவர் வேற்றுமையாக நினைக்கக் கூடாது. அனைவரின் மத நம்பிக்கைகளையும், அவர்களின் சடங்குகளையும் மதிக்க வேண்டும். அனைவரையும் ஏற்றுக்கொண்டு, உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். அதேபோல, மற்றவர்களின் நலனிலும் அக்கறை செலுத்துங்கள். சுயநலம் என்பது இந்துக்களின் மரபணுவில் கிடையாது.












Click it and Unblock the Notifications