அமிதாப் பச்சனுக்கு பாரத ரத்னா விருதா? மமதா மீது அமர்சிங் காட்டம்!
டெல்லி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தியிருப்பதற்கு ராஷ்டிரிய லோக் தளம் கட்சித் தலைவர் அமர்சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு மத்திய அரசு அண்மையில் பத்ம விபூஷண் விருது வழங்கியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அமிதாப் பச்சன், தமது குடும்பத்துக்கு இதுவரை 7 பத்ம விருதுகள் கிடைத்துள்ளது பெருமிதமாக உள்ளது என்று கூறியிருந்தார்.
மேலும் அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண் விருதுக்குப் பதிலாக நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா கொலை தொடர்பாக டெல்லி போலீசின் சம்மனை விசாரணை ஆஜராகிவிட்டு திரும்பிய அமர்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், மமதா பானர்ஜியின் இந்த கோரிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
ஏற்கெனவே தாம் சமாஜ்வாடி கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு காரணமே அமிதாப் மனைவி ஜெயாபச்சன் தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார் அமர்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.