கொரோனா பெருந்தொற்று எதிரொலி.. அமர்நாத் புனித யாத்திரை.. இரண்டாவது ஆண்டாக ரத்து
ஸ்ரீநகர்: கொரோனா பெருந்தொற்று காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
இருப்பினும், ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பில் உச்சபட்ச தளர்வுகள் தேவை என்றும் இல்லையென்றால் கொரோனா 3ஆம் அலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமர்நாத் யாத்திரை ரத்து
இந்நிலையில், கொரோனா காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "இப்போதுள்ள சூழ்நிலையில் பொதுமக்களின் உயிரைக் காப்பது முக்கியம். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையை நடத்துவது நல்லதல்ல.

நேரடி ஒளிபரப்பு
உலகெங்கும் உள்ள லட்சக் கணக்கான பக்தர்களின் உணர்வுகளை ஆலய வாரியம் மதிக்கிறது. குகைக் கோயிலில் காலை மற்றும் மாலை மேற்கொள்ளப்படும் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், கடந்த காலங்களில் செய்யப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் அனைத்து சடங்குகளும் முறையாக நடத்தப்படும்" என்றார்.

அமர்நாத் ஆலய வாரியம்
இது குறித்து அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதீஷ்வர் குமார் கூறுகையில், "எங்கள் யூனியன் பிரதேசத்திலும் நாட்டிலும் உள்ள கொரோனா நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போதைய சூழலில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதிலும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் எங்கள் கவனம் உள்ளது" என்றார்.

அமர்நாத் குகைக் கோயில்
இமயமலையில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் குகைக் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். பொதுவாக ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை 56 நாட்கள் இந்த புனித யாத்திரை இருக்கும். கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications