முலாயம் போட்டியிடும் தொகுதியில்தான் தீவிரவாதிகள் உற்பத்தியாகிறார்கள்- அமித்ஷா பேச்சு
லக்னொ:உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டியிடும் அசம்கார் பகுதிதான் தீவிரவாதத்தின் ஊற்றாக இருப்பதாக விமர்சனம் செய்த அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு பிறகட்சி தலைவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
பாஜகவின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக அமித்ஷா உள்ளார். மோடியின் வலது கரமாகவும் இவர் அறியப்படுகிறார். இவர் அசம்கார் பகுதியில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், அசம்கார் பகுதி தீவிரவாதத்தின் பிறப்பிடமாக மாறியுள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளுக்கு மாநில அரசு மீது அச்சமில்லை, ஏனெனில் அந்த அரசுதான் அவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய அதிக அக்கறை காட்டுகிறது. குஜராத் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தீவிரவாதிகள் அசம்கார் பகுதியை சேர்ந்தவர்கள்தான் என்றார்.
இவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திக்விஜய்சிங் தனது டுவிட்டர் பக்தத்தில்,
மோடியும், அமித்ஷாவும் வளர்ச்சி குறித்த பிரச்சாரத்தில் இருந்து மதவாத பிரச்சாரத்துக்கு மாறியுள்ளனர். குஜராத்தின் மோடசா குண்டுவெடிப்பில் சங்பரிவாரின் தொடர்பை அவர்கள் மறந்துவிட்டனர். அசம்கார் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இடம். சுதந்திரம் பெற்று பாகிஸ்தான் பிரிந்தபோதும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் இந்த பகுதியில் கலவரம் நடந்தது கிடையாது. அமித்ஷாமீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி தலைவர் கமல் ஃபரூக் கூறுகையில்
ஒரு பகுதியையோ, அல்லது ஒரு சமூகத்தையோ தீவிரவாதிகளாக சித்தரிப்பது கண்டிக்க தக்கது. அமித்ஷாவால் தனது நாவை கட்டுப்படுத்த முடியாது. தேர்தல் முடிய இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. ஆனால் மக்கள் மனதில் உருவாகும் துவேஷம் சீக்கிரம் மறையாது என்றார்.
பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், குஜராத்தை வேண்டுமானால் வகுப்புவாதத்தின் பிறப்பிடம் என்று கூறலாம். அமித்ஷாவை உத்தரபிரதேசத்தில் நுழைய தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும். அசாம்கார் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமாகாந்த் யாதவ்தான் பெரிய தீவிரவாதி என்று தெரிவித்தார்.