அமித்ஷா-தம்பிதுரை திடீர் ஆலோசனை.. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருகிறதா அதிமுக?
டெல்லி: டெல்லியில் நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அதிமுக எம்.பி தம்பிதுரை இருவரும் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி, மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். சீனாவுக்கு செல்ல உள்ள பிரதமர் மோடி, வரும் 3ம் தேதி செல்கிறார். அதற்கு முன், மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, தன்பதவியை, நேற்று இரவு ராஜினாமா செய்தார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த பாண்டே, உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அமைச்சர்கள் விருப்பம்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, சிறு மற்றும் குறுந்தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், சுகாதாரத்துறை இணை அமைச்சர் குலாஸ்தே, வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன். மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் பல்யான் ஆகியோரும், ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரகசிய ஆலோசனை
இந்த நிலையில் டெல்லியில் நேற்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக எம்.பியும், அக்கட்சி சீனியர் தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பூட்டிய அறைக்குள் இந்த ஆலோசனை ரகசியமாக நடைபெற்று முடிந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இணைப்பது, அதன்பிறகு, மத்திய அமைச்சரவையில் அதிமுகவை இணைப்பது குறித்தெல்லாம் இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. அமைச்சரவையில் அதிமுகவை இணைப்பதில் மோடி விருப்பம் காட்டுவதால்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
அதிமுக குறித்து ஆலோசனை
அதிமுக கோஷ்டி இணைப்புக்கு பிறகு நடைபெறும் சர்ச்சைகள், ரிசார்ட் அரசியல்கள் குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது. தமிழக அரசை தக்க வைக்க என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை நடந்ததாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.