ஜம்மு காஷ்மீர் ஆட்சி... பாஜக தலைவர்களுடன் டெல்லியில் அமித்ஷா ஆலோசனை
மும்பை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று டெல்லியில், கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா.
நடந்து முடிந்த காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சியில் இழுபறி நிலவி வருகிறது. 19-ந்தேதிக்குள் புதிய அரசு அமைக்க கவர்னர் என்.என்.வோரா கெடு விதித்துள்ளார்.
அதிக இடங்களைப் பிடித்துள்ள மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் அங்கு ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகின்றன. ஆனால், பாஜகவுடன் கைகோர்ப்பதற்கு மக்கள் ஜனநாயக கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று தனது கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களைத் தனித்தனியே சந்தித்து அவர்களது விருப்பங்களைக் கேட்டறிந்தார். அவர்களது கருத்துக்களை இன்றைய கூட்டத்தில் அமீத் ஷாவிடம் அவர் எடுத்து வைப்பார்.
காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 13 நாட்களாகி விட்டன. இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும் கிடைத்தன. தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸுக்கு 12 இடங்களும் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications