நல்ல வேளை, குடியரசு தின அலங்கார ஊர்தியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டல
டெல்லி: குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில், இடம்பெற்ற தமிழ்நாடு ஊர்தியில் நல்ல வேளையாக அம்மா ஸ்டிக்கர் ஒட்ட மறந்துவிட்டனர் போலும்.
நாட்டின் 67வது குடியரசு தினம், தலைநகர் டெல்லியில் நேற்று கண்கவர் அணிவகுப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நாட்டின் ராணுவ வலிமை, கலாசார பன்முகத்தன்மை, பல்வேறு துறைகளின் சாதனைகள் ஆகியவற்றை ராஜபாதையில் பறைசாற்றும் இந்த விழாவில் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும், மத்திய அரசின் 6 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.
ராணுவ அணிவகுப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையின் 56 ஒட்டகங்களும், ராணுவத்தின் 36 மோப்ப நாய்களும் பங்கேற்றன.
இந்த அணி வகுப்பில் இடம்பெற்ற தமிழக ஊர்தியில் ஜெயலலிதா படத்துடன் கூடிய ஸ்டிக்கரை நல்ல வேளையாக அவரது கட்சியினர் ஒட்டவில்லை, எனவேதான், ஊர்தி செல்ல அனுமதி கிடைத்தது என வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் ஓடிக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு, குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, ஒபாமா, ஜெயலலிதாவை வணங்குவதை போன்ற கட்-அவுட்டுடன் தமிழ்நாடு அலங்கார ஊர்தி செல்ல முற்பட்டதால் அதற்கு அனுமதி வழங்கவில்லை என fakingnews.com என்ற நகைச்சுவை செய்தி இணையதளம் கேலி செய்தி வெளியிட்டு கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது.
கட்-அவுட்டுகள் வைத்து தலைமையை குளிர்விப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் நடந்துகொள்ளும் விதத்தை அவ்வாறு அது கேலி செய்திருந்தது. இப்போது கட்-அவுட்டை தாண்டி, ஜெயலலிதா படம் போட்ட ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் அதிமுகவினர் ஆர்வம் காட்டுவதால், வலைவாசிகள் இப்படி ஓட்டுகிறார்கள்.