ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரம் தெரியவில்லையாம்… அமைச்சர் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தையே கறுப்பு பொருளாதாரம் போல் பிரதமர் மோடி ஆக்கிவிட்டார் என்று காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா மோடி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரமே தெரியவில்லை என்று அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. அதன்படி, இன்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா, மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியப் பொருளாதாரத்தையே கறுப்பு பொருளாதாரம் போல் பிரதமர் மோடி ஆக்கிவிட்டார் என்று குற்றம் சாட்டி பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஆனந்த் சர்மாவிற்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று பதிலுக்கு குற்றம்சாட்டினார். மேலும், 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து தொடர்ந்து விளக்கம் அளித்தார்.
மேலும், ராஜ்யசபாவில் பியூஷ் கோயல் பேசியதாவது:
அரசின் நடவடிக்கை குறித்து நேர்மையான மக்கள் கவலைப்பட தேவையில்லை. அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் கோபத்தை காட்டுகின்றனர். தேச நலனை கருத்தில் கொண்டே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு நாடே வரவேற்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் பற்றி தவறாக புரிந்துள்ளார் ஆனந்த் சர்மா. நாட்டில் 500 நோட்டுகள் செல்லாது என்பது போன்ற மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கும் போது மக்களுக்கு சிறிய சங்கடம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் பாதிக்கும் மேல் கறுப்புப் பணம் என்பதால்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் ராஜ்யசபாவில் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications