கொரோனாவால் பக்கத்து வீட்டு நபர் பலி.. அச்சத்தால் ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் இருந்த குடும்பம்
அமராவதி: கொரோனா அச்சம் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக ஆந்திராவில் ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. உயிரிழப்புகள், மக்களின் வாழ்வாதார இழப்பு, நாடுகளின் பொருளாதார இழப்புகள் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகள் ஸ்தம்பித்துள்ளன.
ஊரடங்கு காலங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். அதன் பின்னர் ஊரடங்கு விலக்கிக் கொண்ட பிறகு அவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் சாலைகளில் நடமாடுகிறார்கள்.
ஒரே வாரம்..! மீண்டும் மளமளவென உயர தொடங்கிய கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்.. வார்னிங் தரும் WHO
குடும்பம்
இந்த நிலையில் ஆந்திராவில் ஒரு குடும்பம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பீதியால் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடாலி கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பக்கத்து வீட்டுக்காரர்
கடாலி கிராமத்தைச் சேர்ந்த ருத்தம்மா (50). இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அச்சமடைந்த ருத்தம்மா, கந்தமணி (32), ராணி (30) உள்ளிட்டோர் தங்களுக்கும் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
பூட்டிக் கொண்டு
இதனால் அவர்கள் வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு வெளியே வராமல் இருந்துவிட்டனர். இந்த நிலையில் ஆந்திரா அரசின் வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் அவர்களிடம் கைநாட்டு வாங்குவதற்காக அந்த கிராம அதிகாரி ருத்தம்மாவின் வீட்டுக்குச் சென்றார். அவர் அழைத்தும் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. வெளியே வந்தால் தாங்கள் இறந்துவிடுவோம் என கூறி வர மறுத்துவிட்டனர்.
15 மாதங்களாக பூட்டி கிடந்த குடும்பம்
அப்போதுதான் இவர்கள் கடந்த 15 மாதங்களாக வீட்டுக்குள்ளேயே பூட்டிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராமத் தலைவருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் அவர் தகவல் கொடுத்தார். இதுகுறித்து கிராமத் தலைவர் சொப்பல்லா குருவாத் கூறுகையில் சுட்டுகல்லா பென்னி, அவரது மனைவி, இரு குழந்தைகள் வீட்டுக்குள் இருந்தனர்.
நிலைமை
அண்மையில் அவர்களது உறவினர் ஒருவர் அந்த வீட்டில் 3 பேர் பூட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் அந்த வீட்டுக்கு போலீஸாருடன் போய் பார்த்தோம். அப்போது அவர்களது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
முடி திருத்தாமல்
முடியை திருத்தம் செய்யாமல், பல நாட்களாக குளிக்காமல் இருந்தனர். இதையடுத்து அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு அல்லது 3 நாட்கள் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்திருந்தால் அனைவரும் இறந்திருக்கக் கூடும் என்றார்.