"இது உங்கள் சொத்து"! அரசு பஸ்ஸை ஓட்டிக் கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்ற நபர்! திடீர் ட்விஸ்ட்!
அமராவதி: ஆந்திராவில் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற மனைவியை பார்ப்பதற்காக அரசு பேருந்தை எடுத்துச் சென்ற நபரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பல்வேறு காரணங்களை தெரிவித்தார். கடைசியில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஆந்திர மாநிலம் ஆத்மகுரு மண்டலத்திற்குள்பட்ட வேங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தரகையா. இவர் வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார். இவர் நந்தியால் மாவட்டத்தில் முச்சுமர்ரி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தரகையாவின் மனைவி சொந்த ஊருக்கு சென்றார். அவரை காண செல்லலாம் என தரகையா முடிவு செய்திருந்தாராம். ஆனால் அவரிடம் போதிய பண வசதி இல்லை என கூறப்படுகிறது.
அப்போது எப்படி மாமியார் வீட்டுக்குச் சென்ற மனைவியை பார்க்கச் செல்வது என யோசித்தபடியே இருந்துள்ளார். அப்போது ஆத்மகுரு பஸ் நிலையத்திற்கு வந்த போது அங்கு யாரும் கேட்பாரன்றி அரசு பேருந்து ஒன்று தனியாக நின்றிருந்ததை தரகையா கண்டார்.
பஸ்ஸில் ஏறி பார்த்தார். அப்போது அதில் பஸ்ஸின் சாவியும் இருந்தது. இதனால் ஓட்டுநரான தரகையாவுக்கு, "நம்மிடம்தான் பணம் இல்லை, நம் மனைவியை பார்க்க இந்த அரசு பஸ்ஸை ஏன் எடுத்துச் செல்லக் கூடாது " என நினைத்தாராம். இதையடுத்து பேருந்தில் ஏறி உட்கார்ந்து பேருந்தை ஸ்டார்ட் செய்துள்ளார்.
சிறிது நேரம் காத்திருந்த அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் பஸ்ஸை எடுத்துக் கொண்டு சிட்டாட்டம் பறந்துள்ளார். அப்போது நடுவழியில் போலீஸார் ரோந்து பணியில் இருந்தனர். அந்த வழியாக அரசு பேருந்து அதுவும் ஒரு பயணிகள் கூட இல்லாமலும் நடத்துநரும் இல்லாமல் வருகிறதே என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் ஓட்டுநரும் சீருடை அணியாமல் இருக்கிறாரே என்ற சந்தேகமும் எழுந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீஸார் அந்த பேருந்தை தடுத்து நிறுத்தினர். தரகையாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் பயணிகளும் நடத்துநரும் இல்லாமல் பேருந்தை ஏன் எடுத்து வந்தீர்கள் என கேட்டனர்.
இதற்கு தரகையா என்ன சொல்வது என தெரியாமல் முழித்த போதுதான் அவர் அரசு பேருந்தை திருடிக் கொண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தரகையாவை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த குடும்பத்தினர், தரகையாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனிடையே டெப்போவில் இருந்த அரசு பேருந்து காணாமல் போனது குறித்து அதிகாரிகளிடம் அந்த பேருந்தின் ஓட்டுநர் புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையிலும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் தரகையாவிடம் இருந்து பேருந்தை மீட்டனர். இதையடுத்து அந்த பேருந்தானது ஆத்மகுரு டெப்போ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தரகையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக அவருக்கு எதிராக போலீஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
வடிவேல் காமெடியில் ஒரு அரசு பேருந்தை வடிவேல் இன்னொருத்தருக்கு விலை பேசுவார். அப்போது அவர் யோவ் பஸ்ஸை நல்லா பார்த்துக்கோ, அப்புறம் அது சொட்டை இது சொட்டைனு சொல்லக் கூடாது என்பார். அதற்கு அந்த எதிர்பார்ட்டி, அண்ணே பஸ்ஸுல சீட்டு கிழிஞ்சிருக்கு, 4 , 5 கம்பி வளைஞ்சிருக்கு என்பார். அதற்கு வடிவேல், அதற்கு தேவையானதை கழித்து கொண்டு மீதி பணத்தை கொடு என்பார்.
இருவரும் பழைய வழக்கபடி, கைகளை துணியால் மறைத்து கிரயம் பேசுவார்கள். இதை அந்த பஸ் கன்டக்டர் பார்த்து கொண்டிருப்பார். அவர் யார் வீட்டு பஸ்ஸை எடுத்து யாருக்கு விக்குற என வடிவேலிடம் கேட்பார், அதற்கு வடிவேல் ஓங்கி ஒரு அறைவிட்டு பஸ்ஸின் பின்பக்கம் அழைத்து செல்வார். அங்கு "இது உங்கள் சொத்து, சேதப்படுத்த வேண்டாம்" என எழுதியிருக்கும்.
அதை வடிவேல் படிக்கச் சொல்வார். கன்டக்டரும் படிப்பார். அப்போது வடிவேல் இது என் சொத்து நான் விற்பேன், அடமானம் போடுவேன், நீ என்ன கேட்பது ? என்பார். அதற்கு கன்டக்டரும் ஓங்கி ஒரு அறை விட்டு, இப்ப படி இது யார் சொத்து, இது உங்கள் சொத்து என வடிவேல் படிப்பார். அது போல் இந்த தரகையாவின் சம்பவமும் ஆகிவிட்டது.












Click it and Unblock the Notifications