பாதி வழியில இறங்க முடியாது! செல்பி எடுக்க வந்து.. வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்! இவ்வளவு ஃபைனா?
அமராவதி: செல்பி ஆர்வத்தால் வந்தே பாரத் ரயிலுக்குள் சிக்கிய நபர் ஒருவர், வேறு வழியில்லாமல் பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணித்ததோடு, டிக்கெட் எடுக்காததற்காக அபராதமும் கட்டிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் தான் பயணித்தை போல தனது நண்பர்கள், உறவினர்களிடம் காட்டிக்கொள்வதற்காக இந்த செயலில் அவர் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செல்பி ஆசையால் விபத்துகளும், அசம்பாவித சம்பவங்களும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இதுபோன்ற சில நகைச்சுவைகளும் ஆங்காங்கே நிகழ்ந்துதான் வருகின்றன.
ஆந்திரா - தெலங்கானாவை இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
புதிய வந்தே பாரத் ரயில்
பிரதமர் நரேந்திர மோடி இரு தினங்களுக்கு முன்பு ஆந்திராவின் விசாகப்பட்டினத்தையும், தெலங்கானாவின் செகெந்திராபாத்தையும் இணைக்கும் வகையில் புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களில் இது 8-வது ரயில் ஆகும். ஒன்றாக இருந்து பிரிக்கப்பட்ட இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுவதால் இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது.
ஆர்வக்கோளாறு நபர்
இதனிடையே, இந்த வந்தே பாரத் ரயில் நேற்று விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இடையில் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்றது. அப்போது அங்கிருந்த ராமலு ரெட்டி (44) என்பவர் வந்தே பாரத் ரயிலின் தோற்றத்தை கண்டு மயங்கினார். மேலும், ரயிலுக்குள் சென்று செல்பி எடுத்து, தான் அந்த ரயிலில் பயணித்ததை போல நண்பர்கள், உறவினர்களிடம் கூறிக்கொள்ளவும் அவர் ஆசைப்பட்டுள்ளார்.
தானாக மூடிய கதவு
அதன்படி, ரயிலுக்குள் சென்ற ராமலு ரெட்டி, சுற்றி சுற்றி ரயிலை புகைப்படம் எடுத்தார். மேலும், பல செல்பிகளையும் அவர் எடுத்துக்கொண்டார். பின்னர் ரயில் புறப்படுவதற்குள் அங்கிருந்து அவசர அவசரமாக ராமலு ரெட்டி இறங்க முயன்றார். ஆனால், வந்தே பாரத் ரயிலில் இருப்பது தானியங்கி கதவு என்பதால் தானாகவே அது மூடிக்கொண்டது. ராமலு ரெட்டி எவ்வளவு திறந்து பார்த்தும் கதவு திறக்கவில்லை. அந்த நேரத்தில் ரயிலும் புறப்பட்டுவிட்டது. இதனால் பதற்றம் அடைந்த ராமலு ரெட்டி, ரயிலின் ஒவ்வொரு கதவாக ஓடி ஓடிச் சென்று அதை திறக்க முயன்று கொண்டிருந்தார்.
159 கி.மீ. பயணம்.. அபராதம்..
அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், ராமலு ரெட்டியின் செயல்களை பார்த்து சந்தேகம் அடைந்து அவரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது நடந்த விஷயங்களை கூறிய ராமலு ரெட்டி, தன்னை கீழே இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், இனி அடுத்த ஸ்டாப் 159 கி.மீ. பிறகு வரும் விஜயவாடா தான் எனக் கூறிய டிக்கெட் பரிசோதகர் அவரை ஒரு இடத்தில் அமர வைத்தார். பின்னர் டிக்கெட் இல்லாமல் பயணித்ததற்காக அவரிடம் ரூ.6,000 அபராதமும் வசூல் செய்தார். இதையடுத்து, 159 கி.மீ. பயணித்து நடு இரவில் விஜயவாடாவில் இறங்கி பின்னர் அங்கிருந்து பஸ் பிடித்து ராஜமுந்திரி வந்திருக்கிறார் ராமலு ரெட்டி. இனி அவர் செல்பி எடுப்பார்னு நீங்க நினைக்கிறீங்க?