சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்.... இது ஆந்திரா ரேசன் கடைகள் - அசத்தும் சந்திரபாபு நாயுடு
2018 ஜனவரியில் ஆந்திர மாநிலத்தில் சுமார் 29 ஆயிரம் ரேஷன் கடைகளை சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களாக மாற்ற ஆந்திர அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
ஹைதராபாத்: ஆந்திராவில் ரேஷன் கடைகளை ஒருங்கிணைந்த ஷாப்பிங் மால்களாக உருமாற்றும் நடவடிக்கையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். ஜனவரியில் 29 ஆயிரம் ரேஷன் கடைகளை சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் போய் பொருட்கள் வாங்க வரிசையில் நின்றவர்களுக்கு நன்றாக தெரியும் அந்த கடையில் உள்ள பொருட்களின் லட்சணம். எப்பொழுதும் இடிந்து விழலாம் என்ற கட்டடத்தில்தான் பெரும்பாலான ரேசன் கடைகள் இயங்குகின்றன.
ஒரு பக்கம் எலிகள் கூட்டுத்தனம் நடத்த... அங்காங்கே கரப்பான்பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருக்கும். சர்க்கரை, பருப்பு மூட்டைகள், அரிசி, கோதுமை மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகை பார்த்தாலே பொருட்களை வாங்க மனசே வராது.
ரேசன் கடை ஸ்மார்ட் கார்டு
கடந்த 2005ஆம் ஆண்டு முதலே ரேசன் கார்டு என்ற பெயரில் உள்தாள் ஒட்டியே ஓய்ந்து போனோம். ஆனால் ஆந்திராவில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்து விட்டனர். இப்போது அடுத்த அதிரடியாக ரேசன் கடைகளை ஷாப்பிங் மால்களாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.
தனியாருடன் இணையும் அரசு
ஆந்திராவில் பொது வினியோகத்துறையின் கீழ் வரும் ரேஷன் கடைகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்காக தனியாருடன் இணைந்து ‘சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்கள்' என்ற பெயரில் அதிநவீன ஷாப்பிங் மால்களை உருவாக்கி வருகிறார்.
கிராமங்கள் தோறும் ஷாப்பிங் மால்கள்
தனியார் உதவியுடன் ஆந்திராவில் 6500 ரேஷன் கடைகளுடன் இணைந்த ஷாப்பிங்மால்கள் துவங்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரியில் ஆந்திர மாநிலத்தில் சுமார் 29 ஆயிரம் ரேஷன் கடைகளை ‘சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களாக மாற்ற ஆந்திர அரசு தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இந்த இடங்களில் ரேஷன் கடைகளில் விற்ற பொருட்கள் மட்டுமன்றி மக்கள் அதிகம் வாங்கும் சுமார் 500க்கு மேற்பட்ட பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படும்.
அனைத்து பொருட்களும் கிடைக்கும்
இந்த சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்குமாம். காய்கறிகள், வாசனை பொருட்கள், பாத்திரங்கள், உடைகள், மருந்து பொருட்கள், விவசாய கருவிகள், அலங்கார பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் என அத்தனை பொருட்களும் கிடைக்கும் என்றும் விற்பனை விலையில் இருந்து சுமார் 20 சதவீதம் வரை குறைத்து விற்கப்படுவதால் நுகர்வோர் பயனடைவர்.
மொபைல்போன் விற்பனை
வங்கி சேவை, மொபைல் உள்ளிட்ட தொலை தொடர்பு கருவிகள், மருந்துகள் மற்றும் வீட்டு உபயோக மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையும் இங்கு நடக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ. 5 லட்சத்தில் ஒவ்வொரு ரேஷன் கடையும் சந்திரண்ணா ஷாப்பிங் மாலாக மாற்றம் பெறும்.
எல்லோருக்கும் பொருட்கள்
இதற்கான 50 சதவீத தொகையை ரேஷன் கடை சார்பாகவும், 25 சதவீதத்தை மாநில அரசும், மீதமுள்ள 25 சதவீத முதலீட்டை பிரதம மந்திரி முத்ரா யோஜனா அல்லது வங்கி கடன்கள் மூலம் பெறப்படும்.
ரேஷன் அட்டை இல்லாதவர்களும் இந்த கடைகளில் குறைந்த விலையில் பொருட்களை பெறலாம் என ஆந்திர மாநில சிவில் சப்ளைத்துறை அமைச்சர் பிரதிபாதி புல்லா ரவி அறிவித்திருப்பது அந்த மாநில மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
தமிழக அரசியல்வாதிகள்
இங்கே ரேசன் கடைகளில் உளுந்தும், நல்ல துவரம் பருப்பும் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அம்மா உணவகத்தை வெளிமாநிலங்களில் இருந்து வந்து பார்வையிட்டு செல்வதாக பெருமை பேசும் அரசியல்வாதிகள், ஆந்திரா பக்கம் கொஞ்சம் போய் பயிற்சி எடுத்து விட்டு வரலாம்.