குழந்தையை சந்திக்க அனுமதி மறுப்பு... விரக்தியில் சார்ஜர் வயரால் தற்கொலைக்கு முயன்ற தாய்
மும்பை: தனது காசநோயை காரணம் காட்டி, பெற்ற மகளை சந்திக்க விடாததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் மும்பை ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அசாம்காட்டை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார். அத்தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் திடீரென அப்பெண்ணுக்கு காசநோய் தாக்கம் உண்டானது.
இதனால், அப்பெண் சிகிச்சைக்காக மும்பை சிவ்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக தொடர்ந்து அப்பெண் அதே மருத்துவமனையில் வரும் இரண்டாண்டுகள் தங்கி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைக்கும் நோய் தொற்றும் அபாயம் ஏற்படும் என்பதால் தாயிடமிருந்து மகளை பிரித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து மகளைப் பார்க்க வேண்டும் என உறவினர்களை நச்சரித்து வந்துள்ளார் அப்பெண்.
ஆனால், அவர்கள் குழந்தையை தாயிடம் காட்டாமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் கடந்த திங்களன்று செல்போன் சார்ஜரால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த பெண்ணை மீட்டு, சிகிச்சை அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், தனது மகளை பார்க்கவிடாமல் தடுத்து வருவதால், இந்த விபரீத முடிவை எடுத்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து, அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே காசநோய்க்கு வழங்கப்படும் மருந்து ஒன்றிற்கு தற்கொலையைத் தூண்டும் குணமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.