ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தனரா?- பதிலளிக்க அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி மறுப்பு
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் யாரேனும் சந்தித்தனரா என்ற கேள்விக்கு அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
டெல்லி: அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் யாரேனும் பார்த்தனரா என்ற கேள்விக்கு பதிலளிக்க அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி மறுத்து விட்டார்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியதால் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் அப்பல்லோ நிர்வாக இயக்குநர்பிரதாப் ரெட்டியும், அப்பல்லோ மருத்துவமனைகளின் நிர்வாக தலைவர் ஹரிபிரசாத்தும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதாப் ரெட்டி கூறுகையில் ஜெயலலிதாவுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்பல்லோவால் எந்த அளவுக்கு சிகிச்சை அளிக்கமுடியுமோ அந்த அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.
இதைத் தொடர்ந்து ஹரிபிரசாத் கூறுகையில் ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்ததற்கு வரவேற்கிறோம். விசாரணை குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். ஜெயலலிதா விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை என்றார்.