என்னாது 10 ரூபாய் நாணயம் போலியா...?
10 ரூபாய் நாணயங்கள் போலியாக வலம் வருவதாக வெளியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி: 10 ரூபாய் நாணயம் போலி என்று வரும் செய்திகள் வதந்தி என்று ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது. யாரேனும் பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்தால் தயங்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் போலி இல்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரூபாய் நோட்டு ஒழிப்பு அமலானது முதலே மக்களிடையே பல குழப்பங்கள். அதில் ஒரு புதுக் குழப்பமாக பத்து ருபாய் நாணயங்கள் போலியாக வலம் வருவதாக தகவல் வெளியாகி மக்களை ரொம்பவே குழப்பி விட்டது.
அதிலும் சமூக வலைதளங்களில் இதுதான் ஒரிஜினல் பத்து ரூபாய் நாணயம், இது போலி என்று படம் போட்டு மேலும் குழப்பி விட்டனர். இதனால் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்கத் தயங்குகிறார்கள்.

வதந்தி
ஆனால் இது வதந்தி என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில்தான் இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவியுள்ளதாம். வட கிழக்கு மாநில மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.

தயங்காம வாங்குங்க
இதுகுறித்து யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியா தலைமை பிராந்திய மேலாளர் மகேந்திர தோஹரே கூறுகையில் 10 ரூபாய் நாணயம் தொடர்பான செய்திகள் வதந்திகளே. தாராளமாக அதைப் பயன்படுத்தலாம். அதில் போலி இல்லை என்று கூறியுள்ளார்.

13 நாள் குழப்பம்
கடந்த 13 நாட்களாக 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்புக் குழப்பமே முடிவுக்கு வராமல் தொடர்கதையாக நீண்டு வரும் நிலையில் 10 ரூபாய் நாணயம் குறித்து கிளம்பிய வதந்தியால் மக்கள் ரொம்பவே டென்ஷனாகியுள்ளனர்.

நிலைமை எப்பச் சரியாகும்
இன்னும் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை தீரவில்லை. வங்கிகளிலும் இயல்பு நிலை திரும்பவில்லை. பழைய நோட்டை மாற்ற ஒரு கூட்டம் போய்க் கொண்டுள்ள நிலையில் பணத்தை எடுக்க கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால் எப்போது நிலைமை சரியாகும் என்ற கேள்விதான் மக்கள் மனதைத் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications