உத்தரகாண்ட் சுரங்க விபத்து: பிளான் ‘பி’யை கையில் எடுத்த மீட்புக்குழு.. களமிறங்கும் ராணுவம்
ராஞ்சி: உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவதால் தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக இந்த சுரங்கத்திற்குள் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். இதையடுத்து, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுக்குள் அங்கு குவிந்தன. சுரங்கத்தின் இடிபாடுகளில் துளையிட்டு, இரும்பு குழாய்களை செலுத்தி அதன் வழியே தொழிலாளர்களை மீட்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி அமெரிக்க எந்திரம் மூலம் இடிபாடுகளில் துளையிடும் பணி தொடங்கி நடந்து வந்தது.
மீட்பு பணி: இந்த பணி முழு வீச்சில் நடைபெற்று கொண்டு இருந்த போது, கடந்த 17 ஆம் தேதி சுரங்கப்பாதைக்குள் ஒரு பலத்த சத்தம் ஏற்பட்டது. இதனால் ஷாக் ஆன மீட்புக்குழுவினர் பணியை நிறுத்தினர். அதன்பிறகு, எதிர்முனையில் இருந்து துளையிடுவது, சுரங்கப்பாதை அமைக்கப்படும் மலையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடுவது போன்ற மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மீண்டும் தொய்வு: இருந்த போதிலும் கிடைமட்டமாக இரும்பு குழாய்களை செலுத்தி தொழிலாளர்களை மீட்பதில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டினர். இதன்படி, இடிபாடுகளுக்குள் துளையிடும் பணி நடந்து வந்தது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், குடிநீர், உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக ஏற்கனவே 4 அங்குல குழாய் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களில் அது தொடர்ச்சியாகப் பல பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த நவ. 22ஆம் தேதி இரவு ஆகர் இயந்திரம் அடியில் இருந்த இரும்பின் மீது மோதியுள்ளது. இருப்பினும், மறுநாள் காலை 8 மணிக்கு மீட்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும், ஆகர் இயந்திரம் மறுநாள் மாலை மீண்டும் ஒரு உலோகம் மீது மோதியது.
இன்னும் 4 நாட்களில்: இதையடுத்து இயந்திரத்தின் பிளேடுகளை சரி செய்யப்பட்டு மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இயந்திரத்திற்கு இடையூறாக இருந்த உலோக கர்டர்கள் மற்றும் குழாய்களை அகற்றவே பல மணிநேரங்கள் ஆனது. மறுநாள் நவ.24ஆம் தேதி வெறும் சில மீட்டர் மட்டுமே இருந்த நிலையில், மீண்டும் அடியில் இருந்து உலோகங்கள் மீது இயந்திரம் மோதியது. இதையடுத்து அதை இயந்திரம் மூலம் தோண்டவே முடியாது என்ற சூழல் ஏற்பட்ட நிலையில், மீட்புப் படையினர் அவர்களே துளையிடும் பணிகளில் இறங்க உள்ளனர்.
மீட்புக்குழுவினரே தோண்டும் பணியில் ஈடுபடுவதற்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் மஹமூத் அகமது இது பற்றி கூறுகையில் , “ பெரிய அளவில் இடையூறுகள் எதுவும் இல்லையென்றால் இன்னும் 4 நாட்களில் சுரங்கத்தை செங்குத்தாக டிரில்லிங் மூலமாக எட்டிவிடுவோம்” என்றார்.












Click it and Unblock the Notifications