கருணைக் கொலைக்கு உள்ளாகும் ஓய்வு பெற்ற ராணுவ மோப்ப நாய்கள்.. "ஷாக்" தகவல்!
டெல்லி: நாட்டுக்கு சேவை செய்த முதிய மற்றும் உடல்நலம் குன்றிய மோப்ப நாய்கள் கருணைக் கொலை செய்யப் பட்டு விடுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டைக் காக்கும் முக்கிய பணியில் இந்திய ராணுவத்தில் வீரர்களைப் போலவே மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இந்திய ராணுவத்தில் வெடிபொருட்கள் கண்டறிதல், காவல் புரிதல் மற்றும் ரோந்து செல்லுதல் ஆகிய பணிகளுக்காக ஜெர்மன் ஷெஃபர்ட் மற்றும் பெல்ஜிய மேய்ச்சல் நில நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், வயோதிகம் அல்லது உடல்நலக் குறைபாடு காரணமாக இத்தகைய விலங்குகளுக்கும் பணி ஓய்வு தரப்படுகிறது. முன்னதாக கடினமான பயிற்சிகள் அளிக்கப் பட்ட இந்த விலங்குகள், ஓய்விற்குப் பின்னர் என்ன செய்யப் படுகின்றன என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்திய ராணுவத்திடம் கேட்கப் பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள ராணுவம், ‘இவ்வாறு ஓய்வு பெற்ற விலங்குகளைக் கருணைக் கொலை செய்துவிடுவதாக' பதிலளித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் இந்தப் பதிலால் விலங்கு உரிமை ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர். நாட்டிற்கு சேவை செய்த விலங்குகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து ராணுவத்தால் மிக எளிதாக பராமரிக்க முடியும். ஆனால், அவர்கள் வேலை முடிந்தவுடன் அவற்றை கைகழுவி விடுகின்றனர் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.