அருணாச்சல் மாஜி முதல்வருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு- ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
டெல்லி: அருணாச்சல பிரதேச மாஜி முதல்வர் நபம் துகிக்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக ஆளுநர் ஜே.பி. ராஜ்கோவா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அருணாசலப் பிரதேச அரசியல் நிலைமைகள் தொடர்பாக கடந்த 15-ந் தேதியன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆளுநர் ராஜ்கோவா 4 பக்க அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- ஆளும் காங்கிரஸ் கட்சியின் 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், மாநில முதல்வர் நபம் துகிக்கு தடை செய்யப்பட்ட நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
- மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைவதை நபம் துகி தூண்டிவிட்டார்.
- நிஷி பழங்குடி இனத்தவருக்கு நிதி உதவி அளித்து மத மோதல்களைத் தூண்டி விடுகிறார். அதேபோல் நிஷி பழங்குடிகள், மாணவர் அமைப்புகளை ஆளுநருக்கு எதிராக தூண்டிவிடுகிறார் நபம் துகி.
- ஆளுநர் மாளிகையில் இந்துக்கள் புனிதமாக கருதுகிற பசுவை பலியிட்டனர்.
- ஆளுநருக்கு எந்த ஒரு அறிக்கையும் அளிக்கக் கூடாது என அரசு அதிகாரிகளுக்கு மாநில அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
- ஆளுநர் தம்முடைய கடமையை செய்யவிடாத வகையில் நபம் துகியும் அவரது அமைச்சர்களும் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
- ஆளுநர் கூட்டுகிற எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என்று மாநில அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.
- மாநிலத்தில் நாள்தோறும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
- மாநில அமைச்சகள் டிசம்பர் 15-ந் தேதியன்று என்னை தகாத வார்த்தைகளால் விமர்சித்து தாக்க முயன்றனர். அப்போது என்னுடைய பாதுகாவலர்களே என்னை மீட்டனர்
- இந்த நிலைமகளால் மாநிலத்தில் 356வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசை கலைக்க வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் ராஜ்கோவா அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 15க்கும் மேற்பட்ட அறிக்கைகளை ஜனாதிபதிக்கு ஆளுநர் ராஜ்கோவா அனுப்பியும் வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்தே அங்கு ஞாயிறன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வராக இருந்த நபம் துகி வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் நாளைக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications