டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தை "சீல்" வைத்து சி.பி.ஐ. அதிரடி ரெய்டு!!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகம் மற்றும் டெல்லி அரசின் தலைமையகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநில அரசின் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளராக இருந்த சஞ்சய் பிரதாப்சிங் ரூ2.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று திடீரென டெல்லி மாநில அரசின் தலைமை செயலகம் மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
கேஜ்ரிவால் அலுவலகத்தை இழுத்து மூடி சீல் வைத்துவிட்டு சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சி.பி.ஐ.யின் இந்த அதிரடி சோதனை குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், என்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பிரதமர் மோடியின் கோழைத்தனமான செயல் இது என்று சாடியுள்ளார்.
CBI raids my office
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2015
ராஜேந்திரகுமார் விவகாரம்
இதனிடையே டெல்லி அரசின் முதன்மை செயலாளரான சர்ச்சைக்குரிய ராஜேந்திர குமார் மீதான புகார்கள் குறித்து நடத்தப்படும் விசாரணையின் ஒருபகுதியாகவே டெல்லி அரசின் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியதாக சி.பி.ஐ. தரப்பு தெரிவித்துள்ளது.
கேஜ்ரிவாலின் தனிச் செயலராக இருந்தவர் ராஜேந்திர குமார். அவர் கடந்த மே மாதம் டெல்லி அரசின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த நியமனத்தை அப்போது ஆளுநர் நஜீப்சிங் நிராகரித்திருந்தார். பின்னர் இந்த விவகாரம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரை கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ராஜேந்திரகுமார் நியமனத்தை ஏற்க முடியாது என மத்திய அரசும் கூறிவந்தது.
மேலும் ராஜேந்திர குமார் மீது டெல்லி மூத்த அரசு அதிகாரி ஆஷிஸ் ஜோஷி என்பவர் ஊழல் புகாரையும் தெரிவித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகாலமாக ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் ஒப்பந்தங்களை தொடர்ந்து பெற்று வர ராஜேந்திரகுமார் முறைகேடாக உதவி செய்து வருவதாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடத்தும் வகையில்தான் டெல்லி தலைமை செயலகத்தில் சோதனை நடத்தினோம் என்கிறது சி.பி.ஐ. தரப்பு.
ஆனால் டெல்லி முதல்வரது அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து நாங்கள் சோதனை நடத்தவில்லை; கேஜ்ரிவால் அலுவலகத்துக்குள் நாங்கள் யாரும் நுழையவே இல்லை என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியுள்ளனர். டெல்லி தலைமைச் செயலகத்தில் மட்டுமின்றி மேலும் 4 இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நமது ஒன் இந்தியாவுக்கு தெரிவித்தனர்.