அஸ்ஸாமில் முஸ்லீம்கள் படுகொலை.. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மறுப்பு
குவஹாத்தி: அஸ்ஸாமில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறித் தாக்குதலில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய குடும்பத்தினர் மறுத்து வருவதால் பதட்டம் நீடிக்கிறது.
இந்த கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியதாக 30 பேரை கோக்ரஜார் மற்றும் பஸ்காவில் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு புதிதாக எந்த வன்முறையும் வெடிக்கவில்லை. ஆனால் பதட்டமும், பீதியும் நீடித்து வருகிறது.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கோக்ரஜார், சிராங், பஸ்காவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது. மேலும் பஸ்காவில் கண்டதும் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஸ்கா பகுதிதான் வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வன்முறையாளர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், முதல்வர் தருண் கோகாய் தங்களை வந்து சந்திக்க வேண்டும். அதுவரை இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி விட்டனர்.
மனஸ் தேசியப் பூங்காவில் வனக் காவலர் ஒருவரும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக கைதாகியுள்ளனர். இந்தப் பூங்கா பகுதியில்தான் பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவ இவர் உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவானது, பூட்டான் நாட்டு எல்லையில் உள்ளது.
தனி போடோலாண்டு கோரி வரும் போடோ பழங்குடியின வன்முறையாளர்கள்தான் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போடோலாண்டு டெரிட்டோரியல் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில்தான் முதலில் வன்முறை வெடித்தது.
இந்தப் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு போடோக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மிகப் பயங்கரமான கலவரம் வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையோனோர் முஸ்லீம்கள் ஆவர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது.
தற்போது வன்முறை பாதித்த பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வன்முறைக்குப் பொறுப்பேற்று தான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் கோகாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கோழை அல்ல. போர்க்களத்திலிருந்து நான் பாதியிலேயே ஓட மாட்டேன். தீவிரவாதிகளுக்கு எதிராக இறுதி வரை போராடுவேன் என்றார்.
இதற்கிடையே போடா பழங்குடியின மக்கள் கூறுகையில், அஸ்ஸாமில் உள்ல முஸ்லீ்ம்களில் பெரும்பாலானவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறி போடோக்களின் நிலங்களை அபகரித்து் கொண்டவர்கள் ஆவர். இங்கு அவர்கள் எங்களது வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொண்டு போடோக்களின் நிலையை கேள்விக்குறியாக்கி விட்டனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இக்கலவரத்தில் தங்களுக்குத் தொடர்பு ஏதும் இல்லை என்று போடோலாண்டு தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. அஸ்ஸாம் அரசுதான் இந்த கலவரத்திற்குக் காரணம் என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.