வீட்டை அபகரித்த மகன்.. தந்தையின் பாதத்தை கழுவி மன்னிப்பு கேளுங்க! நீதிமன்றம் சுவாரசிய உத்தரவு
போபால்: மத்திய பிரதேசத்தில் வீட்டை விற்பனை செய்யும் நோக்கத்தில் தந்தையை அடித்து விரட்டிய மகனுக்கு நீதிமன்றம் விசித்திர தண்டனை வழங்கியது. அனைவரின் கண்முன்னே தந்தையின் பாதங்களை கழுவ அறிவுறுத்திய நீதிமன்றம், வீட்டை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என மகனுக்கு உத்தரவிட்டது.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சில வித்தியாசமான தீர்ப்புகள் வழங்கப்படுவது உண்டு. மேலும் தீர்ப்புகளின் போது நீதிபதிகள் கூறும் கருத்துகளும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டை அபகரிக்க தந்தையை தாக்கிய மகனுக்கு நீதிமன்றம் வினோத தீர்ப்பு வழங்கி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
தந்தை-மகன்
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் அருகே உள்ள ஹிரிடே நகரில் வசித்து வருபவர் ஆனந்த் கிரி (வயது 80). இவரது மகன் தாமேஷ்வர் கிரி. இவருக்கு திருமணம் ஆகி சிலோசனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஆனந்த்கிரியின் நிலத்தை மகன் தாமேஷ் கிரி விற்பனை செய்து பணத்தை வைத்து கொண்டார்.
வீடு வழங்க மறுப்பு
தற்போது அவர் ஆனந்த்கிரியின் வீடு மீது கண் வைத்துள்ளார். அதாவது மாநில அரசின் திட்டத்தின் மூலம் 750 சதுரஅடி நிலத்தில் உள்ள ஆனந்த்கிரியின் வீட்டை கைப்பற்ற தாமேஷ்வர் திட்டமிட்டார். இதனால் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி அவர் தனது தந்தையிடம் வலியுறுத்தி வந்தார். இதற்கு அவர் ஆனந்த் கிரி மறுப்பு தெரிவித்தார்.
வீட்டை விட்டு விரட்டப்பட்ட தந்தை
இதனால் கோபமடைந்த தாமேஷ்வர் கிரி மனைவி சிலோசனாவுடன் சேர்ந்து கொண்டு தந்தை ஆனந்த் கிரியை தாக்கி வீட்டில் இருந்து வெளியேற்றினார். மேலும் வீட்டை விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை தாமேஷ்வர் கிரி மேற்கொண்டு ந்தார். இதற்கிடையே வீடு இன்றி தவித்த ஆனந்த் கிரி நீதிமன்றத்தை அணுகினார். ஜபால்பூர் அருகே உள்ள சிகோரா எஸ்டிஎம் நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார்.
வாழ விரும்பவில்லை
அந்த மனுவில், ‛‛எனது வீட்டை விற்பனை செய்யும் நோக்கத்தில் மகன் தாமேஷ்வர் கிரி, மருமகள் சிலோசனா ஆகியோர் என்னை அடித்து துரத்திவிட்டுள்ளனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. ஏற்கனவே எனது கழுத்தை நெரித்து தாமேஷ்வர் கிரி கொலை செய்ய முயன்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். முதியோர் காப்பகத்தில் எனக்கு வாழ விரும்பவில்லை. சொந்தமாக கட்டிய வீட்டில் தான் கடைசிகாலத்தை கடத்த விரும்புகிறேன். தற்போது அது முடியாததால் வாழ்வதை விட சாவதே மேல் என்ற எண்ணமும் தோன்றுகிறது'' என குறிப்பிட்டு இருந்தார்.
தந்தையின் பாதங்கள் கழுவ உத்தரவு
இந்த மனு மீது நீதிபதி ஆசிஷ் பாண்டே விசாரித்தார். தாமேஷ்வர் கிரிக்கு சம்மன் அனுப்பப்பபட்டது. அவர் தனது மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து தாமேஷ்வர் கிரியின் செயலுக்கு நீதிபதி ஆசிஷ் பாண்டே கடுமையாக கண்டித்தார். மேலும் தந்தையிடம் மன்னிப்பு கோரி அவரிடம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதோடு பெற்ற தந்தை என கூட பார்க்காமல் ஆனந்த்கிரியை தாக்கி வீட்டில் இருந்து வெளியேற்றிய செயலுக்கு தண்டனையாக அனைவரின் கண்முன்னே அவரது பாதங்களை கழுவ வேண்டும் என தாமேஷ்வர் கிரிக்கு நீதிபதி ஆசிஷ் பாண்டே உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி
இதையடுத்து தாமேஷ்வர் கிரி தனது தந்தை ஆனந்த் கிரியிடம் மன்னிப்பு கோரினார். மேலும் இனி இதுபோன்ற செயலை செய்ய மாட்டேன். வீட்டை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன் என தெரிவித்தார். அதோடு அனைவரின் கண்முன் தனது தந்தையின் பாதங்களை கழுவினார். இதனால் மனம்மாறிய ஆனந்த் கிரி தனது மகன் மீது எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறினார். இதற்கு நீதிமன்றம் ஒப்புக்கொண்ட நிலையில் ஆனந்த்கிரி தனது மகன் தாமேஷ்வர் கிரியுடன் ஒன்றாக வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.