ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள்: 259 சாட்டியங்களை தொகுத்து வாதிட்ட பவானிசிங்
பெங்களூர்: சிறுதாவூரில் பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை ரூ.39 ஆயிரத்திற்கு எழுதிக் கொடுத்தேன் என்று நிலத்தின் உரிமையாளரான வெங்கட்ராமன் சாட்சியம் அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எத்தனை இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங் தொகுத்து வாதிட்டார்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
259 சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து 14 நாட்கள் வாதிட்ட அரசு வழக்கறிஞர் பவானிசிங், தனது வாதத்தை மொத்தமாக தொகுத்து அளித்துள்ளார்.
பட்டியலிட்ட பவானிசிங்
சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு பங்களா.
நீலாங்கரையில் 2 ஏக்கர், கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். (இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)
தமிழகம் முழுவதும் வாங்கிய நிலங்கள்
காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர், ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
திராட்சைத் தோட்டம்
30 வண்ணங்களில் பலவித கார்கள் மற்றும் டிரக்கர்கள், ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.
ஜெ. சொத்துக்களின் மதிப்பு
வாலாஜாபாத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கி யிருப்பது 100 ஏக்கர் நிலம். இந்த 100 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 40 கோடி ரூபாய் - சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.
சிறுதாவூர் பங்களா மதிப்பு
சிறுதாவூரில் வாங்கியிருப்பது 25.4 ஏக்கர். இந்த நிலத்தின் அரசு மதிப்பு 42.5 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய். நீலாங்கரையில் இருக்கும் ஜெயலலிதா தரப் பினரின் 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.
குறைத்து வாங்கிய ஜெ
காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 200 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 60 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய். கன்னியாகுமரியில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 1,190 ஏக்கரின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.
கொடநாடு எஸ்டேட்
பையனூரில் வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய். கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய்; சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய். அங்கே ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய், சந்தை மதிப்போ 4,500 கோடி ரூபாய்.
5,107 கோடி ரூபாய் சொத்துக்கள்
இந்தப் பட்டியல்படி, 1991-96 - இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூயாய். இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித்திருக்கிறார்.
32 நிறுவனங்கள் தொடங்கிய ஜெ
இவ்வாறு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்காகவே ஜெயலலிதா தரப்பினர் இரண்டாண்டு காலத்தில் (1993-1994) 32 புதிய கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கம்பெனிகளின் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டு, அந்தப் பணத்தின் மூலம், அந்தக் கம்பெனிகள் பெயரில் தமிழகம் முழுவதும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.
டான்சி நில ஊழல்
குறிப்பாக, மெடோ அக்ரோ பார்ம்ஸ் பெயரில் 200 ஏக்கர் நிலமும்; ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ் பெயரில் 1,190 ஏக்கர் நிலமும்; கொடநாடு எஸ்டேட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 898 ஏக்கர் நிலமும்; ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெயரில் 50 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளதுடன்; சூப்பர் டூப்பர் கம்பெனி; ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ்; ஜெயா பப்ளிகேஷன்ஸ்; சசி எண்டர்பிரைசஸ்; இண்டோ-டோகா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடி கல்ஸ்; கிரீன் பார்ம் ஹௌசஸ்; மெட்டல் கிங்ஸ் (இந்தக் கம்பெனிக்காகத்தான் டான்சி நிலம் வாங்கப்பட்டது) என 32 கம்பெனிகள் ஜெயலலிதா தரப்பினர் பெயர்களில் வரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளன.
முறைகேடாக வாங்கிய சொத்துக்கள்
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எத்தனை
இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங் மேலே கூறிய சாட்சியங்களின் அடிப்படையில் விளக்கினார்
மே 19ல் ஜெ. தரப்பு வாதம்
மே 15-ம் தேதி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பு வாதங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்ய இருக்கிறார்கள். ஜெ. தரப்பு வாதம் மே 19-ம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களது தரப்பு சாட்சியங்களின் வாதங்களைத் தொகுத்துச் சொல்வார்கள். சுமார் ஒரு மாதம் இதற்கு ஆகலாம். இந்த அடிப்படையில் பார்த்தால் ஜூன் இறுதிக்குள் அனைத்தும் முடிந்து ஜூலை முதல் வாரம் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.