போர்க்கால அடிப்படையில் ஏ.டி.எம்.கள் சீரமைப்பு: அருண் ஜேட்லி
போர்க்கால அடிப்படையில் ஏடிஎம்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி: புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக நாடு முழுவதும் ஏ.டி.எம். இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்:
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக ஏடிஎம்களை மறுசீரமைப்பு செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பல புகார்களை பெற்றுவந்தோம், ஆனால் இப்போது புகார்கள் குறைந்துள்ளன.
ஏ.டி.எம். இயந்திரங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம், இது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். ரூபாய் நோட்டு மாற்றும்போது சிலர் சிரமங்களுக்கு உள்ளானது துரதிர்ஷ்டவசமானது. மேலும், ரூபாய் நோட்டு அறிவிப்பை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அருண் ஜெட்லி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.