ஜெ. தரப்பு கோரிக்கையை ஏற்ற குன்ஹா: கோர்ட் ஊழியரே ஜாமீன் ஆர்டரை சிறை அதிகாரிகளிடம் அளித்தார்
பெங்களூர்: சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் நடைமுறைகள் முடிந்துவிட்டதற்கான ஆவணங்களை ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறை அதிகாரிகளிடம் கோர்ட் தபால் ஊழியர் வெங்கடேஷ் ஒப்படைத்தார்.
சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கிய நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம் அதிமுக வக்கீல்கள் அந்த ஆர்டரை இன்று காலை சமர்ப்பித்தனர்.

நீதிபதி குன்ஹா, நால்வருக்கும் தலா 2பேர் என பிணையம் பெற்றுக்கொண்டு ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார். இதன்பிறகு ஆர்டர் டைப் செய்யப்பட்டது. மேலும், பிணையம் தந்த நால்வரிடமும் தலா ரூ.1 கோடி மதிப்புள்ள பாண்ட் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் மதியம் 2 மணிக்குதான் முடிந்தன.
இதையடுத்து கோர்ட் ஆர்டர் அதிமுக வக்கீல்களிடம் தரப்பட்டது. ஆனால் தாங்கள் சென்றால் சிறையில் நடைமுறைகளை முடிக்க தாமதமாகும் என்பதால், கோர்ட் ஒரு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று குன்ஹாவிடம் அதிமுக வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குன்ஹா, நீதிமன்றத்தில் தகவல் அனுப்ப பணியிலுள்ள நபர் வேறு வேலையின்றி ஃபிரீயாக இருந்தால் அவரை இதற்கு பயன்படுத்தலாம் என்று அனுமதியளித்தார்.
இதையடுத்து நீதிமன்ற ஊழியர் வெங்கடேஷை அணுகிய அதிமுக வக்கீல்கள் அவரை ஜாமீன் ஆர்டரை சிறைக்கு கொண்டு செல்ல கேட்டுக் கொண்டனர். கோர்ட் ரிஜிஸ்டாரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வெங்கடேஷ் அந்த ஆர்டர் காப்பியை எடுத்துக்கொண்டு பரப்பன அக்ரஹாரா கிளம்பினார்.
போலீஸ் ஜீப்பில் அவர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். அந்த வாகனத்தை அதிமுகவினர் பல கார்களில் பின்தொடர்ந்தனர். மதியம் 2.45 மணிக்கு வெங்கடேஷ் கோர்ட்டை வந்தடைந்தார். அங்கு சிறை அதிகாரிகளிடம் கோர்ட் ஆர்டரை ஒப்படைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பணிகளை சிறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications