ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
ஜெ.மகள் என கூறி உச்சநீதிமன்றத்தில் பெங்களூர் பெண் தொடர்ந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
Recommended Video
டெல்லி: ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய பெங்களூர் அம்ருதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மரணமடைந்துவிட்டார். அவருக்கு சென்னை மெரினாவில் இறுதி சடங்குகள் நடைபெற்றது.
ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகள் தாங்கள் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவும், மகன் ஜெ. தீபக்கும் கோரி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில்
அதேவேளையில் தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் உரிமை கோரினார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அம்ருதா யார்?
அந்த மனுவில் 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மகளாக பிறந்தேன். தனது பெயர் அம்ருதா என்கிற மஞ்சுளா ஆகும். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர்தான் ஜெ,வுக்கு பிரசவம் பார்த்தார். பின்னர் நான் தத்து கொடுக்கப்பட்டேன்.
உண்மையை மறைத்தேன்
1996-இல் பெங்களூருக்கு வந்து என்னை ஜெயலலிதா சந்தித்துள்ளார். இத்தனை நாள்களுக்கு எனக்கு இந்த உண்மை தெரியாது. ஆனால் கடந்த மார்ச் மாதம் எனது வளர்ப்பு தந்தை இறக்கும் தருவாயில் எனக்கு இந்த உண்மையை கூறினார். மேலும் இதை அப்போதே கூறியிருந்தால் ஜெ.வின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் இந்த உண்மையை மறைத்ததாக வளர்ப்பு பெற்றோர் கூறினர்.
உடலை தோண்டி எடுக்க வேண்டும்
எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து அவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இரு மரபணுகளையும் சோதனை செய்து நான்தான் ஜெ.வின் மகள் என அறிவிக்க வேண்டும்.
சடங்குகள் செய்ய வேண்டும்
ஜெயலலிதாவின் உடலை தகனம் செய்யும் போது அவருக்கு வைஷ்ணவ அய்யங்கார் பிராமண முறைப்படி இறுதி சடங்குகள் செய்யவில்லை. அதனால் தற்போது செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் தன்னை சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வருகின்றனர் என்று அம்ருதா கூறியுள்ளார்.
மனுதாக்கல் இல்லை ஏன்?
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி ஆய்வு செய்தார். அப்போது கீழமை நீதிமன்றங்களில் மனுவை தாக்கல் செய்யாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசியல்ரீதியாக தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதால் தன்னால் கீழமை நீதிமன்றங்கள் அணுக முடியவில்லை என்றார்.
உச்சநீதிமன்றம் அறிவுரை
இந்த மனுவில் அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்று கூறுவதற்கான அடிப்படை ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மனுதாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.