வாக்காளர்களை கொட்டித் துரத்திய ‘மாவோயிஸ்ட்’ தேனீக்கள்... தேர்தல் அதிகாரி உட்பட 7 காயம்
லாகர்தாகா: தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயப்படாமல் ஓட்டுப் போட வந்த மக்களை தேனீக்கள் விரட்டியடித்த சம்பவம் ஒன்று ஜார்கண்ட் வாக்குச்சாவடி ஒன்றில் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஏற்கனவே தேர்தலை புறக்கணிக்க கிராம வாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். நேற்று இரண்டு கண்ணி வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தினர்.
இதற்கிடையே தீவிர பாதுகாப்புகளுக்கிடையே நேற்று லாகர்தாகா லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பிஸ்னாபூரில் உள்ள வாக்குச்சாவடியில் காலை பொதுமக்கள் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய சென்றனர்.
அப்போது காட்டுப்பகுதியில் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் அவர்களை ஓட்டுப்போட விடாமல் விரட்டியுள்ளது. இரண்டு வாக்குச்சாவடிகளில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் 45 நிமிடங்கள் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 7 பேர் காயம் அடைந்து அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேனீக்களால் காயமடைந்தவர்களில் தேர்தல் அதிகாரி ரஞ்சன் குமார் மற்றும் அமர்நாத் சாதும் அடங்குவர். பலத்த காயம் அடைந்த அவர்கள் லாகர்தாகா மருத்துவமனைக்கு அனுப்ப பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாற்றப்பட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காலை 9:40 மணிக்கு தேர்தல் மீண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டது. இதனால், வாக்குச்சாவடி எண் 76-ல் முதல் 2 மணி நேரம் வெறும் 24 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.