திருச்சி சிவா உள்ளிட்டோருடன் இன்று காஷ்மீர் செல்கிறது அனைத்து கட்சி குழு.. ராஜ்நாத்துடன் ஆலோசனை
டெல்லி: காஷ்மீரில் அமைதியை கொண்டு வரும் நோக்கில் இன்று காஷ்மீர் செல்ல உள்ள அனைத்துக் கட்சிக் குழுவினருடனான கூட்டம் நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதையடுத்து கடந்த ஜுலை மாதம் 9ம் தேதியில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளர்.
இந்நிலையில், காஷ்மீரில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்று பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் குழு ஒன்று காஷ்மீருக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, 28 பேர் எம்பிகள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.ராஜா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸாதுதீன் ஒவைஸி, முஸ்லிம் லீக் கட்சியின் இ.அகமது, அதிமுக எம்.பி. பி.வேணுகோபால், திமுக எம்.பி. திருச்சி சிவா உள்பட 28 பேர் மற்றும் அரசு அதிகாரிகள் இன்று காஷ்மீர் செல்ல உள்ளனர்.
இதனிடையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் கலவரம் குறித்தும் அங்கு அமைதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.