இன்னும் 5 வருடத்தில் பெங்களூரில் வசிக்கவே முடியாதாம்.. எச்சரிக்கும் ஐஐஎஸ்சி ஆய்வு
பெங்களூர்: இன்னும் 5 வருடத்தில் பெங்களூரில் உயிர்வாழவே முடியாத சூழல் நிலவும் என்று இந்திய அறிவியல் கழகம் பீதியைக் கிளப்பியுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயிர் வாழக் கூடிய சூழல் அறவே இல்லாமல் போகும் அபாயத்தில் பெங்களூர் இருப்பதாகவும் ஐஐஎஸ்சியின் ஆய்வு கூறுகிறது.
பெங்களூர் நகரம் உயிர் வாழத் தகுதியுடைய நகரம் என்ற நிலையிலிருந்து வெகு வேகமாக விலகிப் போய்க் கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
குவிந்து வரும் கட்டடங்கள்
பெங்களூரில் கடந்த 40 ஆண்டுகளில் கட்டடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. அபாயகரமான அளவில் கட்டடங்கள் பெருகிப் போய் விட்டன. கட்டடக் காடாக மாறி நிற்கிறது பெங்களூர்.
525 சதவீத வளர்ச்சி
பெங்களூர் நகரில் கட்டுமானத்தின் வளர்ச்சியானது 525 சதவீத வளர்ச்சி என்ற அபாயகரமான அளவில் உள்ளது. இதை எந்த ஊரும் தாங்காது என்கிறது ஐஐஎஸ்சி ஆய்வு.
செடி கொடிகளையே காணோம்
செடி கொடிகள் மரங்கள், பூக்கள், தோட்டங்கள் என பசுமை நகரமாக விளங்கி வந்த பெங்களூரில் அந்த பசுமை படு வேகமாக குறைந்து விட்டது. அதன் வீழ்ச்சியானது 78 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ஏரிகளைக் காணோம்
ஏரிகள் நகரமாகவும் அறியப்பட்டது பெங்களூர். இன்று 79 சதவீத ஏரிகளைக் காணோம். அங்கெல்லாம் கட்டடங்கள் முளைத்து நிற்கின்றன. நிலத்தடி நீர் வேகமாக வறண்டு போய் வருகிறது.
நகரமயமாக்கலால் நரகமான பெங்களூர்
தோட்டமும், துறவுமாக ஈடன் தோட்டமாக திகழ்ந்து வந்த பெங்களூர் நகரம் இன்று சொர்க்கபுரி என்ற நிலையிலிருந்து நழுவி நரகமாக மாறி நிற்கிறது. மறைந்து போன மரங்களும், ஏரிகளுமே இதற்கு சாட்சி என்று சொல்கிறது ஐஐஎஸ்சியின் ஆய்வறிக்கை.
மடத்தமான வளர்ச்சி
இதுதொடர்பான ஆய்வை மேற்கொகண்ட ஐஐஎஸ்சியின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் டிவி. ராமச்சந்திரா கூறுகையில், பெங்களூர் நகரின் வளர்ச்சி அறிவுப்பூர்வமானதாக இல்லை. மடத்தனமாக இருக்கிறது. இதன் விளைவை எதிர்காலத்தில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அபாயகரமாக இருக்கும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் வசிக்க முடியாது
நிலைமை இப்படியே போனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாழுவதற்கு தகுதியுடைய நகரம் என்ற நிலையிலிருந்து விலகிப் போய் விடும் பெங்களூர்.
ஏசி நகரம் மாசு நகரமானது
ஏசி நகரம் என்று கூறப்படுவது பெங்களூர் நகரம். எப்போதும் இங்கு இதமான குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவும். ஆனால் இன்று அது மாறிப் போய் விட்டது, தூசியும், குப்பையும் அதிகரித்து விட்டது. மாசு நகரமாகி விட்டது பெங்களூர்.
70கள் வரை நல்லாத்தான் இருந்துச்சு
70களின் இறுதி வரையிலும் பெங்களூர் நகரம் நன்றாகத்தான் இருந்தது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இருக்கும் அழகிய நகரம்தான் பெங்களூர். இங்கு ஆறுகள் இல்லை. ஏரிகள்தான். கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஏரிகள்தான் இந்த நகரின் குடிநீருக்கும், குளுமைக்கும் உயிர்நாடியாக இருந்தன. இன்று அவை பெருமளவில் அழிந்து போய் விட்டன.
கம்ப்யூட்டர் வந்தாலும் வந்தது!
ஐடி புரட்சி வந்தாலும் வந்தது பெங்களூர் நாசமாகிப் போய் விட்டது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் பெங்களூரை பொருளாதார வளர்ச்சி பலாத்காரமே செய்து விட்டது என்று கூறலாம்.
காவிரி கை கொடுக்காவிட்டால்
தற்போது பெங்களூரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வது காவிரி ஆறுதான். ஆனால் அந்த ஆறானது, பெங்களூரை விட 1000 அடி கீழே உள்ளது. மேலும் 100 கிலோமீட்டர் தொலைவிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வருகிறார்கள். காவிரியில் தண்ணீர் இருந்தால் பெங்களூர் தப்பிக்கும். வறண்டால் பெங்களூரும் தடம் புரளும்.
150 சதவீத மக்கள் தொகைப் பெருக்கம்
கடந்த 25 வருடங்களில் பெங்களூர் நகரின் மக்கள் தொகை 150 சதவீதம் அதிகரித்து விட்டது. 40 லட்சம் பேர் வரை இந்த நகரத்தால் தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் கிட்டத்தட்ட 1 கோடி பேர் இங்கு வசிக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது பெங்களூர்.
நெரிசலைத் தீர்க்காவிட்டால் பேரழிவுதான்
பெங்களூர் நகரில் மீண்டும் பசுமை அதிகரிக்க வேண்டும். மக்கள் நெருக்கம் குறைய வேண்டும். இயற்கையை சீரமைக்க வேண்டும். மரம் நடுவதை இயக்கமாக மேற்கொள்ள வேண்டும். ஏரிகளைக் காக்க வேணடும். இல்லாவிட்டால் பெரும் பேரழிவைத் தவிர்க்க இயலாது என்று எச்சரிக்கிறது ஐஐஎஸ்சி குழு.