இந்தியாவிலேயே 100 சதவீதம் தடுப்பூசி போட்ட முதல் நகரம் புவனேஸ்வரம்.. சாதித்தது எப்படி?
புவனேஸ்வரம்: இந்தியாவிலேயே ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரம் நகரில்தான் முதல் முறையாக 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் புவனேஸ்வரத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 1 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸை விரட்ட தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்பதால் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான மாநிலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பது சற்று சிரமமான காரியமாக உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசிடம் தடுப்பூசியை மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்குமாறு கேட்டு வருகின்றன. ஆனாலும் இன்னமும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புவனேஸ்வரத்தில் கொரோனா தடுப்பூசி
இந்த நிலையில் ஒடிஸா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதன் மூலம் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட முதல் இந்திய நகரம் என்ற பெருமையை புவனேஸ்வரம் பெற்றுள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
அது போல் ஒரு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டுள்ளனர். இதுகுறித்து புவனேஸ்வரம் மாநகராட்சியின் தென்கிழக்கு மண்டல துணை ஆணையர் அன்சுமான் ராத் கூறுகையில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் புவனேஸ்வரம் மாநகராட்சியில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை வைத்திருந்தோம்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி
இந்த கால கட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 9.07 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டோம். இந்த 9 லட்சம் பேரில் 31 ஆயிரம் சுகாதார ஊழியர்கள், 33 ஆயிரம் முன்கள பணியாளர்கள் அடங்குவர். அது போல் 18 முதல் 45 வயதினரில் 5.17 லட்சம் பேரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3.20 லட்சம் பேரும் இருந்தனர்.

18.35 லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ்கள்
ஜூலை 30-ஆம் தேதி வரை 18.35 லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ்கள் கொடுக்கப்பட்டன. புவனேஸ்வரத்தில் 55 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் 30 மையங்கள் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் கம்யூனிட்டி மையங்களில் ஏற்படுத்தப்பட்டன. கூடுதலாக 15 தடுப்பூசி மையங்கள் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டன.

100 சதவீதம்
இந்த கொரோனா தடுப்பூசி திட்டத்தை மாபெரும் சாதனையாக செய்த புவனேஸ்வரம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சி அதிகாரிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் இந்தியாவில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்ட நகரங்களில் முதல் நகரமாக புவனேஸ்வரம் மாறியுள்ளது என்றார் ராத்.












Click it and Unblock the Notifications