பீகார் பா.ஜ.க. தலைவர் சுஷில்மோடியின் மனைவியும் டுபாக்கூர் பட்டம் வாங்கியவராமே..
பாட்னா: பீகார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுஷில் மோடியின் மனைவியுடன் போலி பட்டம் வாங்கிவர் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரம்தானி சிங் புது குண்டை வீசியுள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற போது ஸ்மிருதி இரானியின் பட்டப்படிப்பு குறித்து சர்ச்சை எழுந்தது. அண்மையில் டெல்லி மாநில சட்ட அமைச்சர் தோமர் போலி பட்டப் படிப்பு சமர்ப்பித்ததில் சிக்கி ஜெயிலுக்குப் போனார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஸ்மிருதி இரானியின் படிப்பு சான்றிதழ்களை சரிபாருங்கள் என குரல் எழும்பி வருகிறது. இந்த நிலையில் பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரம்தானி சிங், அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுஷில் மோடியின் மனைவி போலி பட்டம் பெற்றிருப்பதாக புது குண்டு வீசியுள்ளார். இந்த போலி பட்டத்தின் மூலமே அரசாங்கத்தில் நூலகர் வேலையை பெற்றிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி. தியாகி, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் மனோஜ் ஜா கூறுகையில், இப்புகார் குறித்து தக்க விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பாரதிய ஜனதாவின் சித்தார்த்நாத் ஷிங்கோ, ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் பீகார் மண்ணில் காலாவதியாகிப் போனவைகள்.. தங்களை உயிர்ப்பித்துக் கொள்ள இத்தகைய சர்ச்சைகளை கிளப்புகின்றனர் எனக் கூறியுள்ளார்.
ஆனால் பீகார் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடியோ, தமது மனைவியின் பட்ட படிப்பு சான்றிதழ் உண்மையானதுதான்.. இது தொடர்பாக பொய்யான தகவலை பரப்பி வரும் அமைச்சர் ரம்தானி சிங் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.