கழிப்பறை இல்லாததால் கணவனை விட்டுவந்த புதுப்பெண்- பாராட்டு விழா நடத்திய சமூக நல அமைப்பு
பாட்னா: திருமணமான புதுப்பெண் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் தாய் வீட்டுக்கு திரும்பியதை அறிந்த சமூக நல அமைப்பு ஒன்று அப்பெண்ணுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது.
பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் இருந்து திருமணமாகி அருகில் உள்ள "பிகா பலோத்" கிராமத்திற்கு மாமியார் வீடு சென்ற புதுமணப் பெண், அங்கு கழிப்பறை இல்லாததால் தம்மால் வாழ முடியாது எனவும், அதை கட்டினால் திரும்பி வருவதாகவும் கூறி தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த செய்தியை அறிந்த சமூக நல அமைப்பான சுலப் இன்டர்நேஷனல், கழிப்பறை கட்டி தந்தது. மேலும் அந்தப் பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவும் நடந்தது.
இதுதொடர்பாக சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் பிந்தேஷ்வர் பாதக் கூறுகையில், "காலைக் கடன்களுக்கு பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியிருப்பது மிகவும் கொடுமையானது.
இதை அரசுகள் தங்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். முதலில் கழிப்பறை, பிறகுதான் கோவில் என பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்ததை உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.