குஜராத் கலவரம்: பில்கிஸ் பானோ பலாத்கார வழக்கில் 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை உறுதி!
குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானோ என்ற பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மும்பை: குஜராத் கலவரம் நடைபெற்றபோது, பில்கிஸ் பானோ என்ற இஸ்லாமிய பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்குக் கீழ் நீதிமன்றம் விதித்திருந்த ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, மிகப் பெரிய மதக் கலவரம் வெடித்தது. இதில், இஸ்லாமியர்கள் பலர் கொல்லப்பட்டதோடு, அவர்களின் உடமைகளும் சூறையாடப்பட்டன.
இந்தச் சம்பவத்தின்போது, பில்கிஸ் பானோ என்ற பெண்ணை, 11 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அந்தப் பெண்ணின், குடும்பத்தினரைக் கொடூரமாகக் கொலையும் செய்தனர். அது, இந்தியா முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக இருந்தது.
இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில், மும்பை செசன்ஸ் கோர்ட், கடந்த 2008ம் ஆண்டு, குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், 5 போலீசார், மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரை கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் என்றும் அறிவித்தது.
ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் 11 பேர், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதில், குற்றவாளிகள் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளதால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 5 போலீசார், 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதான குற்றச்சாட்டையும் உறுதி செய்த நீதிமன்றம், அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.
அதேசமயம் இந்த வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, சிபிஐ தாக்கல் செய்திருந்த மனுவை, உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.