தீவிரவாத ஆதரவு நாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை.. இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் கூட்டமைப்பு பிரகடனம்
காத்மாண்டு: நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில், வங்க கடலோர நாடுகளின் தொழில்நுட்ப, வர்த்தக கூட்டமைப்பான, பிம்ஸ்டெக் (BIMSTEC) ஒத்துழைப்பு உச்சி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூட்டான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் இறுதி நாளான நேற்று பிம்ஸ்டெக் தீர்மான பிரகடனம் வெளியிடப்பட்டது.
காத்மாண்டு பிரகடனத்தில் கூறியிருப்பதாவது:
1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாங்காக் பிரகடன, கொள்கைகளை பின்பற்றுவது. பிம்ஸ்டெக் நாடுகள் நடுவே சமத்துவம், எல்லை பாதுகாப்பு, அரசியல் சுதந்திரத்தன்மை, உள்நாட்டு விவகாரங்களில் பிறர் தலையிடாமல் அமைதியான இணைந்திருத்தல் ஆகியவற்றைப் பின்பற்றுவது.
1997ஆம் ஆண்டின் பாங்காக் பிரகடனம் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை அடையாளம் காண்பது. இந்த அமைப்பை மேலும் பலப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து. வங்கக் கடல் பிராந்திய நாடுகளில் அமைதி நிலவவும், வளம் பெருகவும் ஒத்துழைப்பது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இணைக்க, பிம்ஸ்டெக் அமைப்பு ஒரு பாலம் போல செயல்படுவது. இதன் மூலமாக சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வது.
மனித குலத்திற்கும் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் திகழ்ந்து வருகிறது. பிம்ஸ்டெக் நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அவற்றின் நடவடிக்கைகளுக்கு, கூட்டமைப்பு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பது. தீவிரவாத எதிர்ப்பு என்பது அந்த அமைப்பு மீதான நடவடிக்கையாக மட்டுமின்றி, தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து அவற்றிற்கு புகலிடம் வழங்கும் நாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முதலில் அதுபோன்ற நாட்டை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதத்திற்கு கிடைக்கும் நிதி உதவி தடுக்கப்பட வேண்டியது முக்கியம். தீவிரவாத குழுக்களுக்கு ஆட்கள் எடுப்பதை தடை செய்ய நமது கூட்டமைப்பு நாடுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக பிம்ஸ்டெக் நாடுகளின் உளவு துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அடிப்படையில் பிம்ஸ்டெக் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்.
பிம்ஸ்டெக் அமைப்பின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், அதையும் மேம்படுத்தவும் தேவையான நிதி மற்றும் மனித வளத்தை வழங்க வேண்டும். அமைப்பின், இயக்குனர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 7 ஆக உயர்த்த முடிவு செய்வது.
பிம்ஸ்டெக் அமைப்பின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு குழுக்களின் அங்கீகாரத்தை இந்த அமைப்பு பெற தேவையான நடவடிக்கைகளை அனைத்து உறுப்பு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் பணி ஆய்வுகளை மேற் கொள்வதில் உள்ள தயக்கங்கள் களையப்பட்டு அது துரிதப்படுத்தப்பட வேண்டும். பிம்ஸ்டெக் அமைப்பு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும். இந்த வகையில் தாய்லாந்து வழங்கியுள்ள கருத்தாக்க பேப்பர் தொடர்பாக பிம்ஸ்டெக் அமைப்பின் நிரந்தர பணிக் குழு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டபூர்வமான ஆவணங்கள் போன்ற உடனடித் தேவைகளை விரைந்து முடித்திட இந்த உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்குகின்றன.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த சுமித் நகந்தலா செயல்பாடு மற்றும் அவரது பங்களிப்புகளுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு, புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஷகிதுல் இஸ்லாமுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
2014ஆம் ஆண்டு முதல் பிம்ஸ்டெக் அமைப்பில் நேபாளம் அளித்துவரும் பங்களிப்புக்கும், புதிய உறுப்பு நாடான இலங்கைக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிம்ஸ்டெக் உச்சிமாநாடுகளை, உரிய நேரத்தில் நடத்துவது மற்றும் பிற கூட்டங்களை உரிய நேரத்தில் நடத்துவது என்று முடிவு செய்கிறோம்.
இந்தப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அம்சங்களை ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்படுவது என்று உறுதி அளிக்கிறோம்.
இந்த உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு நேபாள நாட்டிற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது