மாட்டிறைச்சி விருந்து நடந்த இடத்தை பசுவின் கோமியத்தால் 'சுத்தம்' செய்த பாஜக!
கர்நாடகா மாநிலத்தில் மாட்டிறைச்சி விருந்து அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தை பசுவின் கோமியத்தை கொண்டு பாஜகவினர் சுத்தப்படுத்தினர்.
மைசூரு: கர்நாடகா மாநிலத்தில் மாட்டிறைச்சி விருந்து அளிக்கப்பட்ட இடத்தை பசுவின் கோமியத்தை கொண்டு பாஜகவினர் சுத்தப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது.
இறைச்சிக்காக மாடுகள், எருதுகள், கன்றுகள், ஒட்டகங்கள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் மாட்டிறைச்சிக்கும் தடை விதித்தது.
இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மைசூருவில் கலாமந்திராவில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் சாரவாகா சமூக மற்றும் கலாசார அறக்கட்டளை என்ற அமைப்பு 3 நாள்கள் கருத்தரங்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
அந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காலை டிபனும், மதிய உணவும் வழங்கப்பட்டது. கருத்தரங்கில் உணவு கலாசாரம் மற்றும் தனிநுபர் சுதந்திரம் என்பதுதான் கருபொருளாக விவாதிக்கப்பட்டது. இதனால் கோழி மற்றும் மாட்டிறைச்சி உணவுகள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து தகவலறிந்த பாஜக இளைஞரணியினர் திங்கள்கிழமை மாட்டிறைச்சி விருந்துக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். மேலும் அந்த அரங்கத்தை பசுவின் கோமியத்தை கொண்டு மாவிலையால் தெளித்து சுத்தப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.