இஸ்லாமிய மத குருக்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், இஸ்லாமிய மத குருக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
புகழ்பெற்ற இஸ்லாமிய மத குருக்களான மௌலான கல்பே சாதிக், மௌலானா காகில்டு ரஷீத், மௌலானா கல்பே ஜவாத் ஆகியோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
வட மாநிலங்களில் பிரபலமான, முஸ்லிம் மதகுரு, மௌலானா கல்பே சாதிக், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசும் போது, பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தன்னை மாற்றிக் கொண்டால், அவரின் கடந்த கால செயல்களை மறக்க, நான் தயாராக உள்ளேன். இதை, அனைத்து முஸ்லிம்களின் சார்பில் தெரிவிக்கத் தயாராக உள்ளேன் என்றார்.
மோடி தன்னை மாற்றிக் கொண்டால், நான் அவரை ஆதரிக்க தயாராக உள்ளேன். குஜராத் கலவரத்திற்கு மோடி பற்றி பலவிதமான கருத்துகள் பரப்பப்படுகின்றன; அவர் மீது பலருக்கு நம்பிக்கை இல்லாத நிலை காணப்படுகிறது. குஜராத் கலவரங்களுக்காக அவர் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை; மாறாக, தன்னை மாற்றிக் கொண்டால் போதும். முஸ்லிம்களுக்கு அவர், அரசியலில் தீண்டத்தகாதவர் அல்ல என்று மௌலானா கல்பே சாதிக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராஜ்நாத்சிங் அவரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்னர் டெல்லி ஷாகி இமாம், சையது அகமது புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்தார். அந்த சந்திப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கும் இஸ்லாமிய மத குருக்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.