சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்- ஒடிசா முதல்வர் பதவி விலகக் கோரி ஜன.7- ல் பந்த்
புவனேஸ்வர்: ஒடிசாவில் பெருமளவில் நடந்திருக்கும் சுரங்க வயல் ஒதுக்கீட்டு முறைகேடுகளை ஷா கமிஷன் வெளிக்கொணர்ந்ததையடுத்து, முதல்வர் நவீன் பட்நாயக் பதவி விலகக் கோரி மாநிலம் முழுவதும் வரும் 7-ந் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
"சட்டவிரோத சுரங்கத் தொழிலால் பல கோடிக்கணக்கில் கனிமவளம் சுரண்டப்பட்டுள்ளதால் இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்பது ஷா கமிஷன் பரிந்துரை.
இக்கமிஷனின் அறிக்கையின் முதல்வர் நவீன் பட்நாயக் பதவி விலக வேண்டும் என்பது காங்கிரஸ், பாஜகவின் கோரிக்கை. ஒடிசா காங்கிரஸ் தலைவர் ஜெய்தேவ் ஜெனா புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசுகையில், நவீன் பட்நாயக் மற்றும் அவரது அரசுக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துக்கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் கமிஷன் அறிக்கை மூலம் நிரூபணமாகியுள்ளன என்றார்.
மேலும் நவீன் பட்நாயக் பதவி விலகும் வரை மாநிலம் தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும். அதன் ஒரு பகுதியாக, வரும் 7-ந் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றார்.
இது தொடர்பாக ஒடிசா பாஜக தலைவர் கே.வி. சிங்தேவ் கூறுகையில், பெரிய முதலைகளை தப்பவிட்டுவிட்டு, சிறிய சுரங்க அதிபர்கள் மீது மட்டும் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவால் வழக்குகளை பதிவுசெய்ததுடன் முதல்வர் தப்பிக்க முயல்கிறார். கமிஷன் அறிக்கையில் மத்திய அரசு மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுக்கொன்று சட்டவிரோதமாக உடன்பட்டு செயல்பட்டதால்தான் பெருமளவில் முறைகேடு நடந்திருக்கிறது என்றார்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கூக்குரலுக்கு அஞ்சமாட்டோம். முதல்வரும் பதவி விலகப் போவதில்லை. ஊடகச் செய்திகளின்படி, மத்திய அரசின் மீதும் ஷா கமிஷன் குற்றம்சாட்டியிருக்கிறது என்று பிஜு ஜனதா தளம் மூத்தத் தலைவரும் சுகாதார அமைச்சருமான தாமோதர் ரௌட் கூறினார்.