காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து வைத்த எம்.எல்.ஏ.வை சட்டசபையில் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ.க்கள்
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ. ராஷிதை பாஜக எம்.எல்.ஏ.க்கள் தாக்கியுள்ளனர். மாட்டிறைச்சி விருந்து வைத்ததற்காக அவர் தாக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லான்கேட் தொகுதி சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ராஷித். அவர் காஷ்மீரில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் நேற்று இரவு விருந்து கொடுத்துள்ளார். விருந்தின்போது போது மாட்டிறைச்சியால் செய்த உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அவர் சட்டசபைக்கு சென்றார். அப்போது அவர் மாட்டிறைச்சி விருந்து கொடுத்த விவகாரம் பற்றி சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்தனர். திடீர் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் ராஷிதை தாக்கினர். இதை பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓடி வந்து ராஷிதை அவர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்றனர்.
பிற எம்.எல்.ஏ.க்கள் வந்து விலக்கிவிட்டும் அவர்கள் ராஷிதை விடவில்லை. உடனே அவை பாதுகாவலர்கள் வந்து பாஜக எம்.எல்.ஏ.க்களை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் சட்டசபையில் பதட்டம் ஏற்பட்டது.
இது குறித்து ராஷித் கூறுகையில்,
நான் யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. மக்கள் தாங்கள் விரும்புவதை சாப்பிடுவதில் இருந்து அவர்களை எந்த நீதிமன்றத்தாலும், சட்டத்தாலும் தடுக்க முடியாது என்றார்.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாட்டிறைச்சி மீதான தடைக்கு 2 மாதம் இடைக்கால தடை விதித்து கடந்த 3 மூன்று நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.