பாஜகவுக்கு இனிமேல் தோல்வி என்பதே கிடையாது: செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா அதிரடி
டெல்லி: பாஜகவில்தான் பூத் கமிட்டியில் வேலை பார்த்தவர் கூட தேசிய தலைவராக முடியும் என்று உருக்கமாக தெரிவித்தார் அக்கட்சியின் புதிய தலைவர் அமித்ஷா. மேலும், பாஜகவுக்கு இனிமேல் தோல்வியே கிடையாது என்றும் அவர் உறுதியளித்தார்.
டெல்லியில் இன்று தொடங்கிய பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, ராஜ்நாத்சிங், அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ராஜ்நாத்சிங்கிடமிருந்து முறைப்படி கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொண்ட அமித்ஷா, அக்கட்சியின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதன்பிறகு நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா பேசியதாவது: தேர்தலின்போது டீ விற்ற ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று ஏழை மக்கள் நினைத்தார்கள். காரணம், மோடியை அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்தார்கள்.
இதனால்தான் நேரு குடும்பத்தாரிடமிருந்து நாட்டுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நான் பாஜகவில் பூத் கமிட்டி தொண்டராகத்தான் அரசியலை தொடங்கினேன். ஆனால் இன்று பாஜகவின் தேசிய தலைவராக்கப்பட்டுள்ளேன். பாஜகவில் மட்டுமே சாமானியர்களும், தகுதியால் உயர்ந்த நிலைக்கு வர முடியும். பாஜகவால் மட்டுமே மோசமான நிர்வாகத்தை மீட்டு நல்லாட்சி தர முடியும்.
நமக்கு அதிகப்படியான சீட்டுகளை வாரி வழங்கிய உத்தர பிரதேச மாநிலத்தில் அமைதியின்மை நிலவுகிறது. அதை நீக்க வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகமாக உள்ளது. உத்தர பிரதேச மாநில அரசின் தோல்விகளையும், பீகாரில் நிதீஷ்குமார் ஆட்சியின்போது நிகழ்ந்த அவலங்களையும் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டிய பணி பாஜகவுக்கு உள்ளது.
{ventuno}
எக்காரணத்தை கொண்டும் ஏழைகள், விவசாயிகள் நலனை மட்டும் பாஜக அரசு விட்டுக்கொடுத்துவிட கூடாது. கட்சியை பலப்படுத்தாவிட்டால் தொடர்ந்து ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ளேன். இனிமேல் பாஜகவுக்கு தோல்வி என்பதே கிடையாது. வருங்காலத்தில் வெற்றி மட்டுமே பாஜகவை வரவேற்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.