பாஜக தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்.. பெரும்பான்மை இருந்தாலும் அதை செய்வோம் - தேவேந்திர ஃபட்னாவிஸ்
பானஜி : கோவாவில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும், மெஜாரிட்டி இருந்தாலும் எங்களுடன் பலரை அழைத்துச் செல்வோம் என கோவாவில் பாஜக மூத்த தலைவரும் மகராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று முன் தினத்துடன் நிறைவு பெற்றது.
பேரறிவாளன் ஜாமீன்: இப்பவாவது மத்திய அரசின் நிலைப்பாடு மாறணும்.. 6 பேருக்கும் பிணை தேவை: வன்னி அரசு
வரும் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வாக்குப் பதிவு நிறைவடைந்த அன்று மாலை வெளியிட்டன.
கோவா சட்டசபை தேர்தல்
கோவா சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கோவா தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜக முயன்று வரும் நிலையில், முதன் முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு?
சிறிய மாநிலமான கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் தனியாக வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும் எனவும், இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
பாஜக தீவிரம்
யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என தகவல் வெளியான நிலையில், அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது. கோவாவில் தொங்கு சட்டப்பேரவையே ஏற்படும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் ஆட்சியமைக்கும் நடவடிக்கையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.
தனிப் பெரும்பான்மையுடன் பாஜக
இந்நிலையில், கோவாவில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும், மெஜாரிட்டி இருந்தாலும் எங்களுடன் பலரை அழைத்துச் செல்வோம் என கோவாவில் பாஜக மூத்த தலைவரும் மகராஷ்டிர முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். மேலும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) ஒரு சுயேச்சைக் கட்சி எனவும், சித்தாந்த ரீதியாக எம்ஜிபியும் பாஜகவும் ஒன்று சேர்வது இயல்பானது என்று நான் நினைக்கிறேன்:" என அவர் தெரிவித்தார்.